என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

14 October 2005

எதிர்ப்பக்கம்

யிலாடுதுறை பஸ் ஸ்டாண்ட் -

எப்போதும் போல் அவசரமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டிருந்தது. சுகி மாதிரி!

சுகி. அதாவது சுகிர்தா. எங்களின் (சிவா என்கிற நான், சதீஷ், இளங்கோ) இனிய தோழி. படபடப்பானவள். எதிலும் ஆர்வமானவள். எப்போதும் துறுதுறுவென்றிருப்பவள். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும், அவள் சொன்ன மாதிரி காத்திருந்த எங்களை நோக்கி வந்தாள். எப்போதும் போல் படபடப்பாய் அவளுக்கே உரித்தான பாணியில், இடையிடையே தனக்கு பஸ் வருகிறதா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டே அவசரமாய்ச் சொன்னாள்...

"நாளைக்கு மறந்துடாதீங்க... ப்ஸ்டாண்ட்ல பதிணொன்றைக்கு பஸ். கண்டக்டர் கிட்ட பூம்புகார் மேலையூர்னு கேளுங்க. ஏன்னா அதே ரூட்ல இன்னொரு மேலையூர் இருக்கு. அப்புறம்... ம்... என்னோட தம்பி புருஷோத் உங்களுக்காக மேலையூர் பஸ் ஸ்டாப்ல காத்திட்டுருப்பான். சரி சரி... பஸ் வருது எனக்கு... நான் வரேன். நாளைக்கு வந்திருங்க..." - எங்களைப் பேசவிடாமல் ஒரெ மூச்சில் சொல்லிவிட்டுச் சென்றாள்.

மயிலாடுதுறையிலிருந்து 17 கி.மீ. தொலைவில், பூம்புகாருக்கு அருகில் இருக்கிறது அவள் வீடு. தினமும் அங்கிருந்துதான் வந்து செல்கிறாள்.

இளங்கலை இரண்டாமாண்டில் ஆரம்பித்த இந்த இரண்டாண்டுகால நட்பு, பிரிவை நெருங்கிக்கொண்டிருப்பதால்...

"டேய்... அப்பா அம்மால்லாம் உங்கள பாக்கணும்னு சொன்னாங்கடா. சிவா வாவது இந்த ஊர் தான். நீங்க ரெண்டு பேரும் காலேஜ் முடிஞ்சி ஊருக்குப் போனா திரும்ப எப்ப இந்தப் பக்கம் வருவீங்கன்னே தெரியாது. சோ, நெக்ஸ்ட் வீக் நீங்க மூணு பேரும் கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரீங்க...." என்று போன வாரமே சொல்லியிருந்தாள்.

அதன் படி இப்போது பஸ் ஸ்டாண்டில் நாங்கள். அவள் வீட்டிற்குச் செல்லும் ஆர்வத்தில் பதிணோரு மணிக்கே வந்து காத்திருக்கிறோம்.

"ஏன்டா... மொதல் தடவயா அவங்க வீட்டுக்குப் போறோம். ஏதாச்சும் வாங்கிட்டுப் போக வேணாமா..?" - சதீஷின் கேள்வி நியாயமாய் இருந்தது.

"ஆமா சதீஷ்... நானும் யோசிக்கவே இல்ல. என்ன வாங்கலாம் சொல்லு..." என்றேன்.

"எதுனா பூ, பழம்..." என்ற இளங்கோவை அவசரமாய்த் தடுத்தான் சதீஷ்.

"ஐயோ... பூவெல்லாம் வேணாம். அதெல்லாம் பெரியவங்கதான் வாங்கிட்டு போவங்க." - அனுபவம் போதாத நிலையில் குழம்பினோம்.

"சரி விடு. ஏதச்சும் ஸ்வீட், பிஸ்கட்... இப்படி வாங்கிக்கலாம். நான் போய் வாங்கிட்டு வறேன். இங்கயே வெயிட் பண்ணுங்க..." - சொல்லிவிட்டு சற்று தூரம் சென்ற நான், மீண்டும் திரும்பி... "பஸ் வந்தா சீட் போட்டு வைங்கடா.." என்று கத்திவிட்டுச் சென்றேன்.

திரும்பி வந்தபோது சொன்ன மாதிரி சீட் போட்டு வைத்திருந்தார்கள். ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த இளங்கோவிற்கு அருகில் எனக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

"டேய் இளங்கோ...ப்ளீஸ்டா...." என கெஞ்சலாய்ப் பார்த்தேன்.

அவனும் புரிந்து கொண்டவனாய், "ஆரம்பிச்சிட்டியா... அப்படி இந்த ஜன்னலோர சீட்ல என்ன தான் இருக்கோ தெரியல..." என்று நகர்ந்து எனக்கு ஜன்னலோர சீட் கொடுத்தான்.

.......

ஸ் விட்டு இறங்கியதும், ஏதோ ஓர் அனுமானத்தில் புருஷோத்தைத் தேடினோம். இறங்கியவர்களில் வித்தியாசப்பட்டு நின்ற எங்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்ட புருஷோத், எங்களிடம் வந்தான்...

"ஹலோ..! நீங்கதானே சிவா, சதீஷ், இளங்கோ....?!"

"நாங்கதான்... புருஷோத் தான நீ...?" என்று புன்னகைத்ததற்கு ஆமோதித்தான்.

"வாங்க போகலாம்..." என்றவனுடன் நடந்தோம்.

சுகி சொல்லியிருக்கிறாள். இருந்தும், வேறென்ன பேசுவது எனத் தெரியாமல் கேட்டேன்...

"என்ன படிக்கற...?"

"டென்த்..."

"இன்னும் ரொம்ப தூரம் நடக்கனுமா..?" - பயணத்தில் கலைந்துபோன தலையை வாரியபடி இளங்கோ கேட்டான்.

"இல்ல பக்கத்துல தான்... அதோ... அந்த பச்சை கலர் வீடுதான். அக்கா கூட வெளில நிக்கறா பாருங்க..."

அப்போது கடந்துகொண்டிருந்த ஒரு வளைவு தாண்டி ஒரு வீட்டைக் காட்டினான்.

சுகி எங்கள் வரவை எதிர்பார்த்துப் புன்னகைத்தபடி நின்றிருந்தாள். எனக்கும் தலை வாரிக்கொள்ளவேண்டும்போல் தோன்றியது. சங்கோஜத்தால் தவிர்த்தேன். இளங்கோ மாதிரி ஏன் கேஷீவலாய் இருக்க முடியவில்லை என யோசிப்பதற்குள் வீடு சமீபித்திருந்தது.

வழக்கமான குறும்புகள் தவிர்த்து, ரொம்ப பொறுப்பாய் சுகி எங்களை வரவேற்றாள். வெளிப்புற கேட் தாண்டி, வீட்டு வாசல் வரை சிமென்ட் நடை. இரண்டு பக்கமும் அழகாய் பூச்செடிகள். அளவாய், அழகாய் கட்டமைக்கப்பட்ட வீடு. வாசலில் நின்றிருந்த அவளின் அப்பாவும் அம்மாவும் வரவேற்று உள்ளே அழைத்து உட்காரச் சொன்னார்கள். தயங்கி நுனி ச்சேரில் அமர்ந்தேன்.

"ஹேய் சிவா... இது உங்க ஹெச். ஓ. டி ரூம் இல்ல. உங்க வீடு மாதிரி தான். நல்லா உக்காரு..." - என் சங்கோஜத்தை ரசித்தாள் சுகி.

"நீங்க தான் சிவாவா..?"

"ஆமாம்பா... இதான் சிவா. சொன்னேன்ல... படம் வரையறதுல எக்ஸ்பர்ட்னு..."

அம்மாவும் அப்பாவும் என்னைப்பார்த்துச் சிரிக்க, நான் எழுந்திருப்பதா இல்லை அமர்ந்தே இருப்பதா எனக் குழம்பி, கொஞ்சம் எழுந்து கொஞ்சம் அமர்ந்து அவர்களின் சிரிப்பிற்கு வழிந்தேன்.

"இது சதீஷ்... கதை கவிதைல்லாம் நல்லா எழுதுவான். போன வருஷம் காலெஜ் மேகசின்ல காமிச்சேன்ல..."

அவனும் பதிலுக்கு வழிந்து வைத்தான். அடுத்த அறிமுகத்திற்கு தன்னை தயார் படுத்திக்கொண்டான் இளங்கோ.

"இது இளங்கோ. என்ன மாதிரி. டிராமா ஸ்கிரிப்ட் எழுதறது, நடிக்கறதுல பெரிய ஆளு..."

"ஐயோ... சுகி அளவுக்கு முடியாதுங்க. நாங்கல்லாம் காலேஜோட சரி. சுகி மாதிரி வீட்ல எல்லாம் இப்படி நடிக்கத் தெரியாது எங்களுக்கு..." என்ற இளங்கோவாவது வழியாமல் பதில் சொன்னானே என்று சந்தோஷப்பட்டேன்.

பின்பு வீட்டை சுற்றிக்காண்பித்தாள். வீடு முழுக்க சுத்தமாய் நேர்த்தியாய் இருந்தது. முன்பு ஒருமுறை, மறுநாள் வரப்போகும் நண்பனுக்காக, என் அறையை அவசர அவசரமாக சுத்தம் செய்தது நினைவுக்கு வந்தது. இவளும் நேற்றுதான் சுத்தப்படுத்தியிருப்பாளோ... 'ச்சே என் புத்தி எங்கே போகும்...'- மனசுக்குள் தலையில் அடித்துக்கொண்டேன்.

மறுபடி ஹாலுக்கு வந்தமர்ந்தோம். இதற்குள் எங்கள் சங்கோஜங்கள் விலகியிருக்க, காலேஜில் அவளுடன் பேசுவது மாதிரி வெகு இயல்பாய்ப் பேச ஆரம்பித்திருந்தோம். அவளின் தம்பி எங்களை விட அருமையாய் அரட்டை அடித்தான். அரட்டைக்கு நடுவே அவள் அம்மா கொண்டுவந்த காஃபி இதமாய் இருந்தது. அனைத்திற்கும் மேலாக அவளின் அப்பா அம்மா எங்களிடம் நட்பாகப் பழகிய விதம் எங்களை மிக இயல்பாய் இருக்கச் செய்தது.

பேச்சின் நடுவே எழுந்து சென்றவள், சின்னதும் பெரிதுமாய் கைக்கடங்காமல் ஆல்பங்களை அள்ளிவந்தாள். ஆளுக்கொன்றாய்ப் பிடுங்க எத்தனித்த எங்களைத் தவிர்த்து...

"இருங்க இருங்க... எல்லாரும் சேந்து பாக்கலாம். என்னால தனித்தனியா ஒவ்வொருத்தருக்கும் கமென்ட்ரி கொடுக்க முடியாது... ஓக்கேவா..." என்றபடி ஒவ்வொரு ஃபோட்டோவுக்கும் சின்னச்சின்ன விஷயங்களைக் கூட நினைவு படுத்தி விளக்கம் கொடுத்தாள். ஃபோட்டோவில் சின்ன வயது சுகி... கைக்குழந்தையாய்க் கட்டிலில், கொஞ்சம் வளர்ந்து அம்மா அப்பாவுடன், school uniform-ல், குட்டித்தம்பியை அனைத்தபடி, தனியாய்... எல்லாவற்றிலும் துறு துறுவென்று. ஏகப்பட்ட கிண்டல் கேலிகளுடன் பார்த்து முடித்தோம். ஏதோ ஒரு school day drama-வில் கட்டபொம்மன் வேஷம் போட்ட சுகியை மட்டும் மறக்கவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் திருப்பிப் பார்த்து வயிறு வலிக்க சிரித்தோம். "வசனம் நல்லா பேசறான்னு இவளுக்கு கட்டபொம்மன் வேஷம் போட்டுட்டாங்க..." என சொல்லிச்சிரித்தார் அவளின் அப்பா. ஒருமாதிரி ஆகிவிட்டது சுகிக்கு.

"போங்கப்பா... நீங்களும் அவங்களோட சேந்துகிட்டு..." - சிணுங்களுடன் கோபித்துக்கொண்ட சுகியை,

"ச்சும்மா டா... உன்ன கிண்டல் பண்ணுவனா..." என்று அனைத்துக்கொண்டு சமாதானப்படுத்தினார். எங்களுக்குப் பொறாமையாகவும் அவளுக்குப் பெருமையாகவும் இருந்தது.

இதற்குள் சுகியின் அம்மா சாப்பிட அழைக்க, எழுந்து சென்று கை கழுவினேன்.

"என்னடா சிவா... இன்னிக்கு மட்டும் சாப்பிடறதுக்கு முன்னடியே கை கழுவற...?" என்ற இளங்கோவின் கமென்ட்டுக்கு அனைவரும் சிரிக்க,

"டேய்... வேண்டாம். நேரம் பாத்து வாறாத... நம்ம மேட்டர் எல்லாம் நமக்குள்ளயே இருக்கட்டும்..." என்றேன் பொய்க்கோபத்துடன். ஆளாளுக்கு கிண்டல் செய்தபடி ஒரே சத்தமாய் சாப்பிட ஆரம்பித்தோம்.

"வேணுங்கறத கேட்டு வாங்கி சாப்பிடுங்க... சாப்பிடறதுல கூச்சப்படக்கூடாது..." என்ற அம்மாவிடம்,

"இல்லம்மா.... அதெல்லாம் ஏற்கனவே சுகிய பாத்து கத்துகிட்டோம்..." - என்னை முறைத்த சுகியை அலட்சித்து "இன்னும் கொஞ்சம் சாம்பார் விடுங்கம்மா..." என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே சாம்பார் ஊற்ற...

"ஐயோ...காயெல்லாம் வேண்டாம்மா... போடாதிங்க...."

"ஏன்... சாப்பிடமாட்டியா...?"

"இல்லம்மா.. பிடிக்காது..."

"சிவாவே ஒரு கொத்தவரங்காதானே... அதான் வேண்டாமாம் அவனுக்கு..."

"நீ கூடத்தான் குண்டு பூசணிக்கா.... இருந்தும் சாப்பிடலியா என்ன...?"

"சரி சரி... சண்ட போடாம சாப்பிடுங்க... சதீஷ், உனக்கு என்னப்பா வேணும்...?"

"கொஞ்சம் ரசம் விடுங்கம்மா..."

"சுகி, உனக்கு...?"

"எனக்கு போதும்மா..."

"சரி சரி... நாங்கள்லாம் இருக்கோம்னு வெக்கப்படாத சுகி... வழக்கம் போல சாப்பிடு..."

"இதுக்கு மேல பேசின உதை வாங்குவ... ஒழுங்கா சாப்பிடு..."

"சரிங்..." என்றேன் பவ்யமாய்.

ஒரு வழியாய் சப்பாட்டுப் படலம் முடிந்து, மீண்டும் அரட்டை ஆரம்பித்தது. கலை, இலக்கியாம், சினிமா என்று ஒரு ரவுண்ட் வந்தோம். பின்பு நேரமாகிவிட்டதால் கிளம்ப மனமின்றி கிளம்பினோம்.

"திரும்ப எப்படா வருவிங்க..." என ஏக்கமாய்க் கேட்ட சுகிக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. இவ்வளவு நாட்களாய் இங்கு வராமல் போய்விட்டோமே என்ற ஏக்கம் அனைவரின் மனதிலும் இருந்தது. வாசலுக்கு வந்தும் கொஞ்ச நேரம் நின்றபடி பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் வீட்டு வாசலில் அதைப்பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது.

"ஏய் லூசு... என்ன தானா சிரிக்கிற..." என்றாள் சுகி.

"இல்ல... இத பாத்ததும் உன்னோட கட்டபொம்மன் வேஷம் தான் தோணுது..." என்றேன் திருஷ்டி பொம்மையைக் காட்டி. அவள் அப்பா உட்பட, எல்லோருக்கும் மீண்டும் அவள் ஃபோட்டோ நினைவுக்கு வர, அடக்க முடியாமல் சிரித்தோம்.

.......

மீண்டும் மயிலாடுதுறை வந்து, சதீஷையும் இளங்கோவையும் ஹாஸ்டலுக்கு அணுப்பிவிட்டு, தனித்து நடந்தேன். திடீரென்று தனித்து விடப்பட்ட மாதிரி வெறுமையாய் இருந்தது. மனம் சுகி வீட்டையே சுற்றிச் சுற்றி வந்தது.

நம் சமுதாயம் ரொம்பவே மாறிக்கொண்டிருக்கிறது. தன் பெண்ணின் ஆண் நண்பர்களை அங்கீகரிக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாய்ப் பட்டது. சுகியின் பெற்றோர்களை நினைக்கயில் மிகப்பெருமையாய் இருந்தது. என்னுடைய தலைமுறையில் இந்த நிலை இன்னும் வளர்ந்திருக்கும். அது இன்னும் ஆரோக்யமான சமுதாயமாகவும் இருக்கும் எனத் தோன்றியது. வீடு நெருங்கியதும் சிந்தனை ஓட்டம் தடைப்பட்டது. வீட்டிற்குள் நுழைந்ததும்...

"எங்கடா... லீவு நாளும் அதுவுமா காலைலேர்ந்து ஆளையே காணும்..?" என்றார் அப்பா.

"சுகிர்தா வீட்டுக்குப் போயிருந்தேம்ப்பா... அம்மா சொல்லல...?!"

"யார்றா அது சுகிர்தா...?!" - அப்பா புருவம் சுருக்கினார்.

"காலேஜ்ல என்னோட friend-பா.." என்றேன்.

"இதென்னடா இது புதுப் பழக்கம்... பொம்பள ஸ்னேகம் வச்சிகிட்டு நாள் பூரா போய் கூத்தடிசிட்டு வர்றது... உன்ன கவனிக்காம விட்டது தப்பாப் போச்சி. எல்லாம் அவ கொடுக்கற இடம்... ஏய் வாடி இங்க..." என்று ஏகத்துக்கும் கத்த ஆரம்பித்துவிட்ட அப்பாவைப்பர்த்து விக்கித்துப்போய் நின்றேன்!

.......

பின் குறிப்பு: நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய கதை. எனவே பல விஷயங்கள் பழைமையாக இருக்கலாம். adjust பண்ணிக்கோங்க :)
Read More