என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

26 July 2006

பழைய ஓவியம் - 2

சின்ன வயதில் நான் வரைந்த ஓவியங்களையும் எழுதிய சில கதைகளையும், பல வருடங்களுக்குப் பிறகு இப்போது பார்க்க நேர்கையில் மிகுந்த ஆச்சர்யமாய் இருக்கிறது. அப்போது வரைந்த/எழுதிய சூழல், அப்போது அதைப் பார்த்த/படித்தவர்கள் அளித்த ஊக்கங்கள் எல்லாம் பசுமையாய் நினைவுக்கு வருகின்றன!

பள்ளிக்கூட நாட்களில்(9-ம் வகுப்பிற்குள், எந்த வகுப்பு என நினைவில்லை!) எனது சின்ன வயது புகைப்படத்தைப் பார்த்து வரைந்தது இந்த ஓவியம்.


இந்த ஓவியத்தின் தற்போதய நிலை கீழே...


பழுப்பேறிய கறைகளை நீக்கியிருப்பதுடன், காகிதத்தில் இருந்த சுருக்கங்களையும் photoshop உதவிகொண்டு நீவி விட்டிருக்கிறேன்!
Read More

15 July 2006

சிறுகதைகள்/கட்டுரைகள்

Read More

14 July 2006

மரணம் என்றொரு நிகழ்வு

(தேன்கூடு போட்டிக்கு எழுதிய சிறுகதை)
சுந்தர் இறந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவன் மனைவியை இன்று ஸ்பென்சரில் பார்த்தேன். பார்க்கிங்கில் என் வண்டிக்கு இடம் தேடிக்கொண்டிருந்த போது என்னைக் கடந்து சென்றுகொண்டிருந்தாள். உடன் இருந்தவர் யாரெனத்தெரியவில்லை. அனேகமாக அது ப்ரேம் சொன்ன 'அவரா'கத்தான் இருக்க வேண்டும்! அவன் சொன்ன மாதிரி அவர்கள் இருவருக்கும் இடையில் பார்த்தமாத்திரத்திலேயே ஒரு அன்னியோன்யத்தை உணரமுடிந்தது.

ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், ப்ரேம், இப்படி இவர்கள் இருவரையும் சத்யம் தியேட்டரில் வைத்துப் பார்த்திருக்கிறான். அடுத்தநாள் எப்போதடா விடியும் எனக் காத்திருந்தவனாய், ஆபீஸ் வந்ததும் என்னைத் தேடி வந்து விஷயத்தைச் சொன்னதுடன், அவரின் அங்க அடையாளங்களையும் விவரிக்க ஆரம்பித்துவிட்டான்! இப்போது பார்த்த இந்த நபர், ப்ரேம் சொன்ன அடையாளங்களுடன் இருந்தார்.

கிடைத்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, மீண்டும் அவர்களைப் பார்க்க எண்ணித் தேடியபோது, கூட்டத்தில் எங்கோ தொலைந்து போயிருந்தார்கள்.

வழக்கம்போல் இன்றும் ஸ்பென்ஸரில் நல்ல கூட்டம். இந்தக் கூட்டத்தை ஏனோ எனக்குப் பிடித்திருந்தது. சில நேரங்களில், வேறெந்த அவசியமும் இல்லாது, வெறுமனே இந்தக் கூட்டத்தை வேடிக்கைப் பார்க்கவென்றே இங்கு வருவேன். இன்றும் அப்படித்தான். எண்ணற்ற மனிதர்களும் அவர்களின் வித விதமான உணர்ச்சிகளும் கொட்டிக்கிடக்கும் இந்த ஸ்பென்ஸரில், கண்ணில் கண்டவற்றையெல்லாம் உள்வாங்கியபடி நடந்துகொண்டிருந்தேன். கூட்டத்திற்குப் பழகிவிட்ட கால்கள் தன்ணுணர்வற்று நடந்து கொண்டிருக்க, மனம் சுந்தரையும் அவன் மரணம் குறித்தான நிகழ்வுகளையும் என் நினைவுகளிலிருந்து மீட்டுக்கொண்டிருந்தது.

சுந்தரின் மனைவியை இதற்கு முன் ஒரேயொரு முறைதான் பார்த்திருக்கிறேன். அதுவும் அவன் இறந்துபோன அன்று! ஆனாலும், என்றுமே மறக்க இயலாத முகமாய், என் மனதின் ஆழத்தில் தேங்கிப்போனது அந்த முகம். அன்றுவரை, அவ்வளவு இழப்பும் வேதனையும் நிறைந்த ஒரு முகத்தை நான் பார்த்தேயிராதது கூட அதற்குக் காரணமாயிருக்கலாம். என் வாழ்வில் நான் எதிர்கொண்ட மிக மோசமான நாட்களில் சுந்தர் இறந்த தினமும் ஒன்று.

இன்றளவும், வீட்டு வேலைகளில் மூழ்கியிருக்கும் என் மனைவியை மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்க நேர்கிற சில பொழுதுகளில், கதறி அழும் சுந்தர் மனைவியின் முகம், என் மனதின் மேலெழுந்து வேதனை செய்துகொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு முயன்றும் அந்த முகத்தை என் மனதினின்றும் அழிக்கவே முடியவில்லை. பல முறை சுந்தர் என்னை அவன் வீட்டிற்கு அழைத்திருந்த போதும், ஏதேதோ காரணங்களால் என்னால் செல்ல முடிந்ததில்லை. அவன் இறந்த அன்றும், அப்படி ஏதாவது ஒரு காரணத்தினால், அங்கு செல்ல இயலாதபடி நிகழ்ந்திருக்கக் கூடாதா என அடிக்கடித் தோன்றும்.

அன்று விபத்தில் சுந்தர் இறந்த செய்தி அறிந்ததும், நானும் ப்ரேமும் அவன் வீட்டிற்கு விரைந்தோம். வடபழனி சரவணபவனுக்கு எதிர்ப்பக்கம், உள்ளே எங்கேயோ அவன் வீடு இருப்பதாய்ச் சொன்னார்கள். சரவணபவன் அருகில் அவன் முகவரியை வைத்து நான் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த பூக்கடையில் ஒரு பெரிய ரோஜா மாலையை பேரம்பேசி வாங்கிக்கொண்டான் ப்ரேம். ஏனோ அந்த மாலையைப் பார்த்ததும் சோகம் இன்னும் அதிகமானது.

அந்தத் தெருவை அடைந்து அவன் ஃபிளாட்டை விசாரித்தபோது, 'எறந்துட்டாரே அவர் வீடுங்களா...?!' என்று கேட்டு வழி சொன்னார்கள். ஃபிளாட்டின் பார்க்கிங்கில் எங்கள் அலுவலக நண்பர்கள் சிலர், இறுகிப்போன முகங்களுடன், பேசக்கூட திராணியற்று நின்றிருந்தார்கள்.

'மேல ஃபஸ்ட் ஃபுளோர்ல ரைட்ல மொத வீடு. பாத்துட்டு வாங்க...' - கணேஷ் சொல்ல, கனத்த மனதுடன் அவர்களைக் கடந்தோம்.

'எங்களால அங்க நிக்கவே முடியல ப்ரேம்! அதான் வந்துட்டோம்... நீங்க பாத்துட்டு வாங்க...'

குரல் தழுதழுக்கச் சொன்ன 'அக்கவுண்ட்ஸ்' மாணிக்கத்தின் வார்த்தைகளை, அங்கு சென்ற சில நிமிடங்களில் உணர முடிந்தது. சுந்தரின் உடலை ஒரு கண்ணாடிப்பெட்டியில் அடைத்து, ஹாலின் நடுவே வைத்திருந்தார்கள். விபத்தின் சுவடுகள் எதுவும் தெரியாதபடி, அவன் உடல் முழுக்க வெள்ளைத் துணி சுற்றப்பட்டிருந்தது. முகம் மட்டும் எந்த சலனமுமற்று தூங்கிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. சுற்றிலும் அவன் உறவினர்கள் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்க, அவன் தலைமாட்டில் அமர்ந்திருந்த அவன் மனைவி, மிக களைத்துப்போன முகத்துடன், பின்புறம் அவளைத் தாங்கியபடி அமர்ந்திருந்தவர்கள் மீது சாய்ந்து கிடந்தாள். சக்தியின்றிப் பாதி மூடிய விழிகளும், கன்ணீரில் நனைந்து முகத்தில் ஒட்டிய கலைந்த கூந்தலுமாய் பேச்சற்று இருந்தவளைப் பார்த்ததும் என் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.

நாங்கள் வருவதற்குச் சற்றுமுன் மூர்ச்சையாகியிருப்பாள் போலும். முகத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீர், கழுத்தில் வழிந்து நைட்டியை நனைத்திருந்தது. அவளையும் மீறி அவள் உதடுகள் மிக மெலிதாய் எதையோ முனுமுனுத்துக் கொண்டேயிருந்தன. களைத்துப்போய் அமைதியடைந்திருந்த முகம், எதையோ நினைத்தபடி விம்மலுடன் அழ எத்தனிப்பதும், தாங்கிப் பிடித்திருந்தவர்கள் அவள் தோள்களை அழுத்த, மீண்டும் அமைதியடைவதுமாய் இருந்தது.

ப்ரேம் கொண்டு வந்திருந்த மாலையை, கண்ணாடிப்பெட்டியின் மேல் முன்பே வைக்கப்பட்டிருந்த மாலைகளுடன் வைத்துவிட்டு, துளிர்த்த கண்ணீரைத் துடைத்தபடி தலை கவிழ்ந்தோம். ஏற்கனவே அழுது களைத்திருந்த அவன் அப்பா, புதிதாய் வந்த எங்களைப் பார்த்ததும் 'இப்புடி எங்கள ஏமாத்திட்டு போய்ட்டானேப்பா...' என்று மீண்டும் அழ ஆரம்பித்தார். என்ன சொல்லியும் அவரை சமாதானப் படுத்த முடியாது எனத்தோன்ற, இதமாய் அவரின் தோள்களைப் பற்றிக்கொண்டேன். என் கைகளுக்குள் அவர் உடல் இன்னும் அதிகமாய்க் குலுங்க ஆரம்பித்தது. 'சாயங்காலம் என்ன டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு போனாம்ப்பா...' - பொங்கிய அழுகையினூடே வந்த அவரின் புலம்பல்கள் ஆதரவற்று அலைந்துகொண்டிருந்தன.

சுந்தர் அப்பாவின் வார்த்தைகளைக் கேட்டோ என்னவோ, கண்கள் செருகி பாதி மயக்கத்திலிருந்த அவன் மனைவி, திடீரென எழுந்து 'அய்யோ... இப்படி என்னத் தனியா வுட்டுட்டுப் போய்ட்டீங்களே...நா இனிமே என்ன செய்வேன்...' எனப் பெருங்குரலுடன் அழ ஆரம்பித்தாள். தொடர்ந்து இப்படித்தான் அழுது கொண்டிருக்கிறாள் போலும். எங்களைத்தவிர மற்றவர்கள் இதை எதிர்பார்த்தவர்களாகவே இருந்தார்கள். பக்கத்தில் இருந்த பெண்கள் அவளை இறுக்கிப் பிடித்துக்கொள்ள, திமிறிக்கொண்டு அழுதாள். தாங்காத மனதுடன், 'அய்யோ.. அய்யோ..' என்று அரற்றியபடியே மீண்டும் மூர்ச்சையானாள். அதைக் காணச் சகிக்காமல், பெண்கள் கூட்டம் மொத்தமும் குரலுயர்த்தி அழுதது. பக்கத்திலிருந்தவர்கள் மீண்டும் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து, எதையோ குடிக்கச்செய்தார்கள்.

தொடர்ந்து அந்த முகத்தைப் பார்க்கும் திராணியற்றுத் திரும்பிக் கொண்டேன். என் மனசுக்குள் ஏதோ அறுந்துகொண்டதுபோல் இருந்தது. வாழ்வின் நிலையற்ற தன்மை, தன்னை முழுதும் உணர்த்திப் பயமுறுத்தியது. என் மீது சாய்ந்திருந்த அவன் அப்பா, 'இவள எப்படி காப்பாத்தப்போறேனோ...' என்று மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். என் நிலை உணர்ந்த அவர் உறவுகளில் ஒருவர், 'மாமா... இப்படி உக்காருங்க... ரொம்ப நேரம் நிக்க வேண்டாம்... வாங்க...' என்றபடி அவரைப் பிடித்து பக்கத்திலிருந்த நாற்காலியில் மெதுவாய் அமர வைத்தார்.

'வா கீழ போய்டலாம்' என்பதாய் ப்ரேமைப் பார்த்தேன். அவனும் அதற்கேக் காத்திருந்தவன் போல் கிளம்பினான். வெளியில் வராண்டா முழுக்க, பக்கத்து வீடுகளில் பெறப்பட்ட ச்சேர்களும் ஸ்டூல்களும் நிறைந்திருக்க, அவற்றை துக்கத்திற்கு வந்திருந்த ஆண்கள் நிறைத்திருந்தார்கள். நாங்கள் கீழிறங்கி, பார்க்கிங் பகுதிக்கு வந்தோம். எங்கள் அலுவலக நண்பர்கள், சுந்தரின் நல்ல குணங்களை நினைவுகூர்ந்தபடி சோகத்தில் மூழ்கியிருந்தார்கள். விபத்து பற்றி விபரமறிந்த ஒருவர் மற்றவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

சூழ்நிலைக்குச் சற்றும் பொருத்தமில்லாமல், ஒரு குழந்தை, பெரிய பந்து ஒன்றை இங்குமங்கும் உதைத்து விளையாடி, சத்தமாய்ச் சிரித்துக்கொண்டிருந்தது. துக்கத்திற்கு வந்திருந்த ஒருவர், அந்தக் குழந்தைக்கு விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்தார்!

'அது சுந்தர் பையன். இன்னும் ரெண்டு வயசுகூட ஆகல...'

கணேஷ் சொன்னதும் மனம் வெறுத்துப் போனது. அழுதுகொண்டிருந்த அவன் மனைவியை விட, சிரித்துக்கொண்டிருந்த அவன் மகனைப் பார்க்க, மிக வேதனையாய் இருந்தது. ஆறோ அறுபதோ... வேறெந்த வயதில் மரணம் சம்பவித்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். இப்படி இளம் மனைவியையும், ஒன்றரை வயதுக் குழந்தையையும், திக்கற்று நிற்க வைக்கிற, மத்திம வயது மரணங்களை விடக் கொடியது எதுவுமே இல்லை எனத் தோன்றியது. எப்படி யோசித்தும் ஒரு தெளிவிற்கே வரமுடியாத, சுந்தர் மனைவியின் எதிர்காலத்தை நினைத்தபடியே வீடு திரும்பினோம்.

நாங்கள் பயந்தபடியே, சுந்தரின் மனைவி, அவன் இறந்த ஒரு வாரத்திற்குள் இரண்டுமுறை தற்கொலைக்கு முயற்சித்தாள். 'இந்த குழந்தைக்காகவாவது நீ வாழத்தான் வேண்டும்' என்று எப்படியெல்லாமோ அவளைச் சமாதானப் படுத்தியிருக்கிறார்கள். எங்கள் பாஸ், தனக்குத் தெரிந்த ஒரு கம்பெனியில் அவளுக்கு ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுத்தார். ப்ரேம் யூகித்தபடி, இப்போது அவளுடன் பார்த்த அவர், அங்கு வேலை செய்பவராயிருக்கலாம்.

ஏதேதோ யோசித்தபடி, ஸ்பென்ஸருக்குள்ளேயே சுற்றிச் சுற்றி, மியூசிக் வேல்டு முன் வந்திருந்தேன். ஆச்சர்யமாய் அவளை மீண்டும் மியூசிக் வேல்டு உள்ளே பார்த்தேன். கூட வந்திருந்தவரைக் காணவில்லை. ஏதோ ஒரு ஆர்வம் உந்த, நானும் உள்ளே சென்று அவளைப் பின்தொடர்ந்தேன். என்னை அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கிருந்த ஒலிப்பேழைகளை மேலோட்டமாய்ப் பார்த்துக்கொண்டே சென்றவள், இளையராஜாவின் 'how to name it' ஆல்பம் பார்த்ததும் சட்டென நின்றுவிட்டாள். அது சுந்தருக்கு மிகப்பிடித்த ஆல்பம். பெரும்பாலான இரவுகளில் அதைக் கேட்கத் தவறுவதில்லை என்று சிலாகித்துச் சொல்லியிருக்கிறான். அவற்றுள் ஒன்றை கையில் எடுத்துவைத்துக்கொண்டு ஆழமாய்ப் பார்த்தவள், பின் அதே இடத்தில் அதை வைத்துவிட்டுச் சென்றபோதுதான் கவனித்தேன்... அவள் காலில் மெட்டி அணிந்திருந்தாள்!

மியூசிக் வேல்டின் வேறொரு பகுதியில் நின்றிருந்த அவரை அவள் அடைந்தபோது, 'ப்ளீஸ் டாடி... ப்ளீஸ்.. ப்ளீஸ்...' என்று அவள் மகன் அவரிடம் உரிமையாய் எதையோ கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருந்தான். 'என்னங்க..? ரொம்ப படுத்தறானா...?!' என்று அவரைப் பார்த்துக் கேட்ட அவளின் புன்னகை நிரம்பிய முகம், இவ்வளவு நாட்களாய் என் மனதுக்குள்ளேயே இருந்து என்னை இம்சித்துக் கொண்டிருந்த அந்தக் கதறி அழும் முகத்தை எங்கோ விரட்டியடித்துவிட்டது! மனம் மிக லேசானதாய் உணர்ந்தேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களை மனமாற வாழ்த்தவேண்டும் என்று எழுந்த ஆசையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். ஏனோ அந்த சந்தர்ப்பதில் சுந்தரை அவர்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்பவில்லை.

நிறைந்த மனதோடு ஸ்பென்சர் விட்டு வெளிவே வந்ததும், என்னை வருடிச்சென்ற அந்தி நேரத் தென்றல், உள்ளே அனுபவித்த குளிரூட்டப்பட்டக் காற்றைவிட இதமானதாய் இருந்தது. எவ்வளவு பெரிய துயரத்தையும், 'இது எனக்கு ஒரு விஷயமே இல்லை' என்பதாய்ப் புறந்தள்ளி நடக்கிற காலத்தை வியந்தபடி, பார்க்கிங்கில் என் வாகனத்தைத் தேடியபோது நினைத்துக் கொண்டேன்... இனி எந்த மரணமும் என்னைப் பெரிதாய் பாதிக்காது!
Read More

03 July 2006

ஆறு great வழியல்கள் :)

முன்பு நாலு விளையாட்டிற்கு அழைத்த உண்மை இப்போது ஆறு விளையாட்டிற்கும் அழைத்திருக்கிறார்கள். நன்றி உண்மை :)

முன்னாடியே நாலு நாலா என்ன பாதிச்சதெல்லாம் எழுதிட்டதால, இப்போ கொஞ்சம் வித்தியாசமா வேற எதாச்சும் எழுதலாமேன்னு யோசிச்சேன். நாம ஏதாவது இக்கட்டுல மாட்டி வழியறப்போ மத்தவங்களுக்கு அது ஜாலியாவே இருக்கும். ஏன் கொஞ்ச நாள் கழிச்சு யோசிச்சுப் பாத்தா நமக்கே அது ஜாலியாத்தான் இருக்கும்! வழியறது ஒரு கலை! நமக்கு அது கை வந்தது!! வாழ்க்கைல நான் நிறைய வழிஞ்சிருக்கேன். அதுல எனக்கு பெஸ்ட்டுன்னு தோணின ஆறு இங்கே...

1. சின்ன வயசுல ஒருவாட்டி லீவுக்கு பாட்டி வீட்டுக்குப் போயிருந்தப்போ, வீட்ல அம்மா, சித்தி, மாமி, பாட்டியெல்லாம் பக்கத்துத் தெருல யாரோ ஒரு பொண்ணு வயசுக்கு வந்திருக்குன்னு சொல்லி அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வந்தாங்க. எனக்கு ரொம்ப நாளாவே 'அப்படின்னா என்ன?'-ன்னு ஒரு டவுட்டு. ஆனா வெளிய யார்கிட்டயும் கேக்க முடியாத மேட்டர்னு மட்டும் புரியுது. ஆர்வம் தாங்காம அன்னிக்கு என் தங்கை கிட்ட கேட்டுட்டேன். அவ விழுந்து விழுந்து சிரிக்கிறா. அப்போ அங்க வந்த எங்க மாமி என்னடின்னு கேக்க, 'இங்க பாருங்க மாமி... குமார் வயசுக்கு வர்றதுன்னா என்னன்னு கேக்கறான்...'-னு போட்டுக்கொடுத்துட்டு சிரிச்சிக்கிட்டே ஓடிட்டா! எங்க மாமியப் பாத்து வழிஞ்சேன் பாருங்க அன்னிக்கு..! 'ஆமா.. ரொம்ப முக்கியம். போடா.' னுட்டு போய்ட்டாங்க!!

2. B. Sc. படிச்சிட்டு இருந்தப்போ, ஒரு ஞாயித்துக்கிழமை ஹாஸ்டல்ல நிம்மதியா தூங்கிட்டு இருந்தேன். early morning 8.30 இருக்கும். ஒரு சீனியர் கைல ஸ்வீட்டோட வந்து எழுப்பினாரு. அவருக்கு அன்னிக்கு B'Day வாம். சொல்லிட்டு ஸ்வீட் எடுத்துக்கச் சொன்னாரு. ஸ்வீட் எடுத்துக்கறதுக்கு முன்னாடி விஷ் பண்ணனும்ல... அதான மறியாத. 'முதல்ல கையக் குடுங்க... best of luck...' னு உளறிடேன்! பசங்கல்லாம் ஒரே சிரிப்பு. 'ஹி ஹி.. சாரிங்க... happy b'day...' னு வழிஞ்சேன். அன்னிக்கு முழுக்க அவர எதிர்ல பாக்கறப்போல்லாம் அவர் சிரிக்க நான் வழிய... அப்படியே போச்சு!

3. B. Sc. final year-ல நம்ம friend வினோத் ஒரு பொண்ண பல மாசமா லுக் விட்டுகிட்டு இருந்தான். தினமும் அவளப்பத்தி ஒரே புலம்பல்தான். அவ பேர வினிதா வினிதா வினிதான்னு 3006 முறை(அதென்ன கணக்கோ தெரியல!) ஒரு நோட்ல எழுதி வச்சிருந்தான். அவதான் வாழ்க்கையேன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். அந்தப் பொண்ணோட friend ப்ரியா எனக்கும் friend. நீ தான்டா எப்படியாச்சும் ப்ரியா கிட்ட சொல்லி இந்த மேட்டர வினிதாவுக்கு கன்வே பண்ணனும்னு தினமும் ஒரே தொல்லை. சரி போய்த்தொலையறான்னு ப்ரியா கிட்டப் பேசினேன். 'அய்யய்யோ இதெல்லாம் நான் சொல்ல முடியாது. வேணும்னா உன் friend-ட கூட்டிகிட்டு வா... நான் அவளுக்கு intro கொடுக்கறேன். அவனே அவ கிட்ட சொல்லிக்கட்டும்' - னு ப்ரியா சொல்ல, இவன் கிட்ட அத வந்து சொன்னேன். சரிடா ஆனா நான் பேசறப்போ நீயும் என் கூட இருக்கனும்னான்.

ஒருநாள் காலேஜ் முடிஞ்சி காலேஜ் பஸ் மயிலாடுதுறை வர்றப்போ அவ இறங்கற ஸ்டாப்பிங்ல மீட் பண்றதா plan எல்லாம் போட்டாச்சு. நானும் வினோத்தும் முன்னாடியே அவனோட சைக்கிள்ல போய் அந்த ஸ்டாப்பிங் பக்கத்து பொட்டிக் கடை கிட்ட வெயிட் பண்றோம். பையன் நகத்தக் கடிக்கிறான்... கைல இருந்த நோட்டக் கிழிக்கிறான்... ஒன்னும் இருப்புக் கொள்ளல அவனுக்கு. பஸ் வர்றதப் பாத்ததும் ரெம்பப் பரபரப்பாயிட்டான்.

பஸ் வந்து நின்னதும் முதல்ல ப்ரியா இறங்கி வந்தா. என்னப் பாத்து கூப்பிட்டா. இவன பின்னடியே வாடான்னுட்டு நான் ப்ரியா கிட்டப் போய் பேசறேன். 'அவகிட்ட எதாவது சொல்லியிருக்கியா...'-னு கேட்டேன். 'நான் எதுவும் சொல்லல, எத்தேச்சையா மீட் பண்ண மாதிரி இருக்கட்டும். நான் இதுல சம்பந்தப்பட விரும்பல'-னு ப்ரியா சொல்லிகிட்டு இருக்கப்பவே வினிதா பஸ் விட்டு இறங்கி ப்ரியா கிட்ட வர்றா...

'ஏய் வினி, இது என் friend அருள்... உன் கிட்ட ஏதோ பேசணுமாம்...' என்று ப்ரியா அவளுக்கு என்னை intro கொடுக்க, அவள் 'ஹாய்... சொல்லுங்க...'-ன்னா. 'இல்லங்க... இது என் friend வினோத்...'-னு சொல்லிக்கிட்டே திரும்பறேன்... இவன ஆளக்காணோம்! கடை கிட்டயே நிக்கறானோன்னு அங்கப்பாத்தா அங்கயும் இல்ல!! எங்கடா போயிருப்பான்னு சுத்திமுத்திப்பாத்தா, ரொம்ப தூரத்துல சைக்கிள்ல வேகமாப் போய்க்கிட்டிருக்கான்! அப்புறம் என்னத்தச் சொல்ல.... 'ஹி.. ஹி... ப்ரியா உங்களப் பத்தி நிறைய சொல்லியிருக்காங்க... அதான் ச்சும்மா உங்ககிட்ட பேசலாம்னு...'- இப்படி ஏகத்துக்கும் வழிஞ்சி ரெம்பக் கொடுமையாப் போச்சி போங்க!

4. Crescent Engineering College ல MCA சேந்த முதல் வருஷம். வந்த கொஞ்ச நாள்லயே நம்மளோட ஓவியத்திறமை எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சிடுச்சி(class நடக்கறப்போ சும்மா இருந்தாத்தானே!). எங்க டிப்பார்ட்மெண்ட் Symposium வந்தப்போ ஆடிட்டோரியம் வாசல்ல ரங்கோலி போட, என்ன ஸ்கெட்ச் போட்டுத்தர சொன்னாங்க. function-க்கு முத நாள் காலேஞ் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் போனப்புறம் வேலைய ஆரம்பிச்சோம். என்னையும், லேடிஸ் ஹாஸ்டல்ல இருந்து நாலு BE பொண்ணுங்களையும் ரங்கோலிக்கு assign பண்ணி இருந்தாங்க.

ஒரு ஆளு கோட்டு சூட்டோட கைல எரிஞ்சிக்கிட்டு இருக்கற ஒரு டார்ச் பிடிச்சிகிட்டு இருக்கற மாதிரி out line போடுங்க, நாங்க கலர் அடிச்சிக்கறோம்னு சொன்னாங்க. சரி ஒரு ஆரை மணி நேரம் டைம் கொடுங்கன்னு சொன்னேன். அப்போ நீங்க போட்டு வைங்க, நாங்க ஹாஸ்டல் போயிட்டு வறோம்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. நான் என் திறமையெல்லாம் பயன்படுத்தி 20 நிமிஷத்துலயே முடிச்சிட்டு இவங்களுக்காகக் காத்திருந்தேன். நாலு பேரும் வந்து பாத்திட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. பின்ன... நான் வரைஞ்ச ஆளு கைல பிடிச்சிட்டு இருக்கறது நாலு பெரிய பேட்டரி போடற டார்ச் லைட்டாச்சே :(

'ஹைய்யோ... நாங்க சொன்னது இந்த டார்ச் இல்லீங்க... ஒலிம்பிக்ல எல்லாம் எடுத்துகிட்டு ஓடுவாங்களே... அது..'-ன்னாங்க. அன்னிக்கு வழிஞ்ச மாதிரி என்னிக்குமே வழியலீங்க! பசங்கன்னக்கூட பரவால்ல. பொண்ணுங்க வேறையா... ரெம்ப அவமானமாப்போச்சு அன்னிக்கு. நான் என்னங்க பண்றது... அதுவரைக்கும் டார்ச்னா எங்க ஊர்ல ராத்திரில வயலுக்கு மக்கள் தண்ணிகட்ட போறப்போ எடுத்துட்டுப் போற பேட்டரி லைட்டுன்னுதான் நினைச்சிட்டு இருந்தேன்!

5. நான் இதுக்கு முன்னாடி வேலை செஞ்ச கம்பெனில, ஒரு நள் என்னோட சீட்ல கால்மேல கால் போட்டு ரிலாக்ஸ்டா உக்காந்து போன்ல ரொம்ப நேரமா கடல போட்டுகிட்டு இருந்தேன். போன்ல ஒரே சிரிப்பு, கிண்டல் தான். ஒரு பத்து நிமிஷமா எங்க boss என் பின்னாடி வந்து நின்னுகிட்டு எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்திருக்கார்! friends எல்லாம் செம டென்ஷன் ஆகி, எனக்கு ஏதேதோ சிக்னல் கொடுத்திருக்காங்க. கடல போடறப்போ நாம எத கவனிச்சிருக்கோம்?! ஒருவழியா பேசி முடிச்சிட்டு திரும்பிப்பாத்தா இவர் நிக்கிறார்! 'ஏம்பா... வேல நேரத்துல என்ன இது...?!' - னு தலைல அடிச்சிக்காத குறையா அவர் கேக்க, வழியறதத்தவிர நமக்கு வேற என்ன வழி..! அவர் என்னல்லாம் கேட்டிருப்பார்னு நான் பேசினதெல்லாம் திரும்பவும் நினைச்சுப்பாத்து அடிக்கடி சிரிச்சுக்குவேன் :)

6. ஒரு நாள் நான், என் friend, அவளோட அம்மா மூணு பேரும் T Nagar போயிருந்தோம். அங்க இருந்து பக்கத்துல எங்கயோ போறதுக்கு ஆட்டோ புடிக்கணும். ரொம்பப் பக்கம் தான், 20 ரூபாக்கு மேல கொடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டோம். அப்போ அங்க வந்த ஆட்டோவ நிறுத்தி, போக வேண்டிய இடத்தச் சொல்லி, எவ்ளோப்பான்னு நான் கேட்க, அவன் 15 ரூபா கேட்டிருக்கான். நான் அத கவனிக்காம ரொம்ப சீரியசா 'ஏம்பா உனக்கே அநியாயமா இல்ல... பக்கத்துலதான... 20 ரூபா வாங்கிக்க'-னு பேரம் பேசறேன். 'சார் நான் 15 ரூபாதான கேட்டேன்' னு அவன் பாவமா சொல்ல, என் friend விழுந்து விழுந்து சிரிக்கிறா. 'இனிமே பேரம்பேச அருளதான் கூட்டிகிட்டு போகணும்'னு சொல்லி அவங்க அம்மாவும் சிரிக்கிறாங்க. சும்மாவே என்ன பயங்கரமா கலாய்க்கற என் friend-க்கு இந்த சம்பவம் ரொம்ப நாள் யூஸ் ஆச்சு. ஒவ்வொருவாட்டி இத அவ சொல்லிக் காட்டறப்பயும் பதிலுக்கு வேற எதும் சொல்ல முடியாம வழிவேன்!

டிஸ்கி: மூணாவது சம்பவத்துல என்னோட பேரத்தவிர மத்தவங்க பேரெல்லாம் மத்தியிருக்கேன் :)

அப்புறம் என்னங்க... அடுத்த ஆறு பேர கூப்பிடணுமா...? போனவாட்டியே நான் கூப்பிட்ட 4 பேர்ல யாருமே 4 விளையாட்டுக்கு வரல. அதுல மூணு பேர் அந்த அழைப்ப பாக்கவே இல்லன்னு நினைக்கிறேன். நானும் தனிமடல் போட்டு அவங்களுக்குச் சொல்லாம விட்டுட்டேன். சரி அழைப்பது நம் கடமை, வருவது அவங்க உரிமைன்னு நினைச்சு அடுத்த ஆறு பேர கூப்பிட்டுடுவோம். நாம விளையாட்டோட விதிய மீறக்கூடாதில்லையா... :)

1. குழலி
2. கவிதா
3. இளவஞ்சி
4. நாம், இந்திய மக்கள்
5. செல்வராஜ்
6. சிங். செயக்குமார்
Read More