என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

02 November 2006

கனவுப் பெண்

பழைய ஓவியம் - 3

சின்ன வயதிலிருந்தே ஓவியர் மணியம் செல்வனின்(ம.செ.) ஓவியங்கள் என்றால் கொள்ளை ப்ரியம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காதவை அவரின் ஓவியங்கள். அதிலும் அவரின் கோட்டோவியங்களும் வாட்டர் கலர் ஓவியங்களும் மிகச்சிறப்பானவை. கல்கியில், கல்கியின் சிவகாமியின் சபதம் ம.செ. ஓவியங்களுடன் தொடராக வந்தபோது எனக்கு இரட்டை விருந்து! ம.செ படைத்த சிவகாமியின் அழகு சொல்லி மாளாது. அதில் வரும் அரண்மனைகளாகட்டும், அரச காலத்து உடைகளாகட்டும்... அனைத்தும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும். ஆனந்த விகடனில் தொடராக வந்த, சுஜாதாவின் 'பூக்குட்டி' கதைக்கான ஓவியங்களும் இப்படித்தான்... என்றும் மறக்க இயலாதவை.

பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல இயலாத எனக்கு, ம.செ வின் ஓவியங்களே பாடங்கள். எங்கள் வீட்டில் வார, மாத இதழ்களுக்குப் பஞ்சமேயில்லாததால், ம.செ வின் ஓவியங்கள் எதில் வந்தாலும் எனக்குக் கிடைத்துவிடும். நான் வரைந்தவற்றில், அவரின் ஓவியங்களைப் பார்த்து வரைந்ததுதான் நிறைய.
ம.செ வின் நாயகிகள், எனது கனவுப்பெண்ணின் சாயலுக்கு மிக நெருங்கியவர்கள்! அப்படி ஒரு நாயகிதான் கீழே இருப்பவர்...



ஓவியத்தின் தற்போதைய நிலை இங்கே...



நன்றி: adobe photoshop
Read More