என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

03 July 2007

கூர்க் - தொடர்ச்சி...

கூர்கில் எங்களது இரண்டாம் நாள் மிக இனிதாக விடிந்தது. வழக்கம்போலில்லாமல் அன்று நேரத்திலேயே எழுந்துவிட்டோம் - மலைப்பிரதேசத்தின் விடியல் அழகை ரசிக்க. எங்குமே காலை வெய்யிலின் அழகே தனி. காடு மலைகளுக்கிடையே என்றால் கேட்கவேண்டுமா என்ன? சுத்தமான கற்றை சுவாசித்தபடி சின்னதாக ஒரு நடைபயணம். இன்றைக்கும் இங்கேயே இருந்துவிடலாமா இல்லை வேறு ஏதாவது பார்க்கச்செல்லலாமா என்று யோசித்தபடி நடந்தோம்.
நிம்மதியாக இங்கேயே இன்றைக்கும் ஓய்வெடுக்கலாம் என்று தோன்றினாலும், புகைப்படங்களில் பார்த்த 'கோல்டன் டெம்பில்'-ன் பிரம்மாண்டமும், பளபளப்பும் ஆசைகாட்டியது. இனி இங்கே எப்போது வருவோமோ... அதையும் பார்த்துவிட்டே போய்விடலாம் என்று முடிவெடுத்தோம்.
காலை உணவுக்குப்பின் அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். புத்தர் ஆலயமான அந்த 'தங்கக் கோயில்' இருப்பது 'குஷால் நகர்'-ல். மடிக்கேரி சென்று அங்கிருந்து குஷால் நகர் சென்றோம். வழியில் தலைக்காவேரிக்குச் செல்லும் பாதைகள் பிரிகின்றன. நேரமின்மையால் அங்கெல்லாம் செல்ல முடியவில்லை.
மடிகேரியிலிருந்து குஷால் நகர் செல்லும் வழியில் 'நிசர்கதாமா' சென்றோம். காவேரி ஆற்றினால் சூழப்பட்ட ஒரு குட்டித் தீவுதான் இந்த நிசர்கதாமா. உள்ளே செல்ல ஒரு தொங்கும் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் மூங்கில் காடுதான் உள்ளே. குழந்தைகள் விளையாட ஊஞ்சல் முதலான நிறைய விஷயங்கள் இருக்கின்ற. நாங்கள் எதையும் விட்டுவைக்கவில்லை! மரத்தின் மேல் அமைக்கப்பட்ட ஒரு சின்ன குடில் இன்னொரு விசேஷம். அப்புறம் படகுசவாரி, யானை சவாரி கூட இருக்கிறது.
காவேரியில் இறங்கிக் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டுக் கிளம்பினோம். அங்கிருந்து மிக அருகிலேயே குஷால் நகர் தங்கக் கோயில். கூர்கில் நான் ரொம்பவும் ரசித்தவற்றுள் இந்தக் கோயிலும் ஒன்று. கோயிலின் கூரை முதல் எல்லாமே தங்கத்தில் பளபளக்கிறது. நல்ல வடிவமைப்பு. சின்னச்சின்ன அழகிய சித்திர வேலைப்படுகளும் ஓவியங்களும் ரசிக்க வைக்கின்றன.
உள்ளே சென்றால் பிரம்மாண்டமான புத்தர் சிலை. அதுவும் தங்கத்தில் ஜொலிக்கிறது. நீளம் மற்றும் சிவப்பு வண்ணப் பின்னனியில் சிலை மிக எடுப்பாக இருக்கிறது. மனிதனின் அகந்தையை அழிக்க, சமய வேறுபாடின்றி பெரும்பாலான ஆலயங்களில் பயன்படுத்தப்படும் "பிரம்மாண்டம்", இங்கும் சரியாய்ப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது!
கூர்கின் முழு அழகையும் ரசிக்க வேண்டுமானல் நிச்சயம் இரண்டு நாட்கள் போதாது. குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தங்கி சுற்றிப்பார்க்க வேண்டும். திரும்பத் திரும்ப ஊட்டி கொடைக்கானல் என்று சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் கூர்க் ஒரு நல்ல மாற்றாக அமையும்!
Read More