என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

27 June 2006

சில புரிதல்கள்

எதிர்பாராமல் இன்று
உன் குழந்தைகளுடன்
நீ எதிர்ப்பட்ட சந்திப்பில்

வெறுமையாய்ப் புன்னகைத்து
பரஸ்பரம் குடும்பநலம்
விசாரித்துக் கொள்ளமுடிகிற
நம் உள்ளங்கள்
மாறிமாறிச் சொல்லியிருக்கின்றன-

"நீ இல்லாத
ஒரு வாழ்க்கையை
நினைச்சு கூட
பாக்க முடிலடா..."

யார் இல்லாவிட்டாலும்
யாரும் வாழமுடியுமென
கடந்த சில வருடங்களில்
மெளனமாய்
சொல்லிக் கொடுத்திருக்கிறது
காலம்!
Read More

19 June 2006

பெரிய மனுஷன்

(ஜூன் 2006 - தேன்கூடு போட்டிக்கு எழுதிய சிறுகதை)

நாளைக்குக் காலையில் வீட்டில் இருப்போம் என்று நினைத்ததுமே மனசு இறக்கை கட்டிக்கொண்டது. அனேகமாக பஸ்ஸில் அனைவரும் தூங்கிவிட்டார்கள். நான் மட்டும் முகத்திலறையும் குளிர்ந்த காற்றை ஒரு வன்மையுடன் தாங்கிக்கொண்டு கொட்டக் கொட்ட விழித்திருந்தேன். நானும் கவனித்துவிட்டேன், ஊரிலிருந்து ஹாஸ்டலுக்குத் திரும்பும்போதுதான் பஸ்ஸில் ஏறியவுடன் தூக்கம் வருகிறது எனக்கு.

கடந்த ஒரு வருடமாய் இந்த ஹாஸ்டல் வாழ்க்கையுடன் மெல்ல மெல்ல ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வந்துவிட்டாலும், ஊருக்குச் செல்வதென்றால் ஒரு தனி உற்சாகம் வந்துவிடுகிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் 24 மணி நேரமும் நண்பர்களுடன் இருக்கிற ஹாஸ்டல் வாழ்க்கையை ரொம்பவும் பிடித்துத்தான் போயிருந்தது. இங்கு வந்த முதல் இரண்டு மாதங்கள்தான் ராகிங் ராகிங் என்று கலவரப்படுத்திவிட்டார்கள். ஆனால், 'வெல்கம் டே' யிலிருந்து சீனியர்களும் எங்கள் நண்பர்களாகிவிட, ஹாஸ்டல் வாழ்க்கையின் ருசி புரிய ஆரம்பித்தது.

அப்பப்பா... இந்த ஹாஸ்டல் வாழ்க்கையும்தான் எவ்வளவு விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது! எத்தனை விதமான மனிதர்கள்... எத்தனை விதமான குணாதிசயங்கள்! ராஜூவின் கதையை முதன் முதலில் கேட்டபோது வேதனைப்படுவதா இல்லை ஆச்சர்யப்படுவதா எனத் தெரியவில்லை. அவன் சொல்வது போன்ற அப்பாக்களை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அம்மாவை அடிக்கும் அப்பாக்கள் நிஜத்திலும் இருக்கிறார்கள் என ராஜூ சொல்லித்தான் தெரியும். அவனை அவனுடைய மாமாதான் இந்த கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறார். இப்படி ஓவ்வொருத்தருக்கும் நல்லதும் கெட்டதுமாய் நிறைய கதைகள்!

'லோக்கல் காலேஜிலேயே படிக்கிறேன், ஹாஸ்டலுக்கெல்லாம் போக மாட்டேன்' என்று அடம்பிடித்த என்னை, 'அப்பதான் உலகம் புரியும்' என்று அப்பாதான் கட்டாயப்படுத்தி சென்னைக்கு அனுப்பிவிட்டார். இப்போது அவரைப் புரிந்துகொள்ள முடிகிறது. வெளியில் வந்து பார்க்கும்போதுதான் என் வீடு என்னை எவ்வளவு சொளகர்யமாய் வைத்திருந்தது என்று உறைத்தது.

ஆனாலும், இந்த 'ஹோம் சிக்' தான் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. +2 வரை வீட்டைப் பிரிந்து இருந்ததே இல்லை. விடுமுறைகளில் உறவினர் வீடுகளுக்குச் சென்றால் கூட குடும்பத்துடன்தான்! அதுவும் இந்தப் பாப்புவுடன் சண்டை போடாமல் என்னவோ போலிருக்கிறது. நான் ஹாஸ்டல் வந்ததிலிருந்து அவள் பாடு ஜாலிதான். வீட்டில் இப்போது அவள் என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை. இபோதெல்லாம் மாதத்திற்கு ஒரு சனி ஞாயிறு என இரண்டு நாட்கள் ஊருக்குப் போகும்போது கூட, முன்பு போல் பாப்புவுடன் சண்டை போட முடிவதில்லை. எங்கே... அந்த இரண்டு நாட்களில் எனக்குக் கிடைக்கும் ராஜ உபச்சாரங்களை அனுபவிக்கவே நேரமிருப்பதில்லையே!

அந்த இரண்டு நாட்களும் வீட்டில் எனக்குப் பிடித்தவைதான் சமைக்கப்படும். இவ்வளவு விஷயங்கள் நமக்குப் பிடிக்குமென்று அம்மாவுக்குத் தெரியுமா என்று ஆச்சர்யமாய் இருக்கும். அப்பா கூட, அவருடைய friend பாலா அங்கிள் வந்து வெளியில் கூப்பிடும்போது, 'பையன் வந்திருக்காண்டா, அடுத்த வாரம் போலாம்...' என்று வீட்டிலேயே இருந்துவிடுவார். பாப்புதான் ஏகக் கடுப்பில் இருப்பாள். அவளுக்குப் பிடித்ததை அம்மாவிடம் கேட்டால் கூட, 'நீ இங்க தானடா இருக்க... அடுத்த சன்டே செஞ்சுக்கலாம், என்ன...' என்று சொல்லிவிடுவார்கள். அவளுக்குப் பிடித்தது கிடைக்காததல்ல அவள் பிரச்சனை. நான் இருக்கும்போது அவள் இரண்டாம்பட்சமாக ஆனதைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இதில் இவை அனைத்தையும் நல்ல பிள்ளையாய் ஏற்றுக்கொண்டு அவளை நான் பார்க்கும் அலட்சியப் பார்வைதான் அவளை இன்னும் எரிச்சல் படுத்தும்.

நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவளுடன் ஒரே சண்டைதான்.

'போடி பன்னி...'

'நீதாண்டா நாயி...'

'நீதான் எறும மாடு' - என்று ஆரம்பிக்கும் சண்டைகள்...

'நீ சொல்றதெல்லாம் உனக்கே...'

'அதெல்லமே திருப்பியும் உனக்கே...' என்று ஆத்திரம் வலுத்து...

சற்றைக்கெல்லாம் அடிதடியாய் மாறும்.

எவ்வளவுதான் அடித்துக்கொண்டாலும், அப்பவோ இல்லை அம்மாவோ வந்து விலக்கும்போது கடைசியாய் யார் அடித்தார்களோ அவர்களே வென்றதாக எங்களுக்குள் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. ஒருமுறை அம்மா என்னைப் பிடித்து இழுக்க, அப்பா அவளைப் பிடித்து இழுக்க, கடைசியாய் எட்டி என்னை அடித்துவிட்டாள். எனக்குப் பயங்கர ஆத்திரம். நானாவது தோற்பதாவது. என் வலிமையெல்லாம் திரட்டி, அம்மாவை மீறி, எட்டி விட்டேன் ஒரு உதை. கிட்டத்தட்ட மிஸ் ஆகிவிட்டது என்றுதான் நினைத்தேன். நானே எதிர்பார்க்காமல் என் கால் கட்டைவிரல் லேசாக அவள் மீது பட்டுவிட்டது. அதை உறுதிசெய்யும் வகையில் அவளைப்பார்த்து பழிப்பு காட்டினேன். 'ட்ரெஸ்லதான் பட்டுச்சு. போடா...' என்று அவசரமாய் அழுகையை நிறுத்திச் சொன்னாள். 'ஒன்னும் இல்ல.. அங்க பாரு. உன் கால்லதான் பட்டிருக்கு...' என்று நான் நிரூபித்ததும் மீண்டும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள். எப்பொழுதும் தோற்பவர்கள் வெகுநேரம் அழுதுகொண்டிருப்போம்!

பெரும்பாலும் அடிதடி சண்டைகளில் நான் ஜெயித்தாலும், நான் அடிக்கடி தோற்கும் இடம் - அப்பா அம்மா அவளுக்கு ஏதாவது வாங்கித் தரும் போதுதான். அவளுக்கு மட்டும் தோடு, ச்செயின், வளையல் என தங்கத்தில் வாங்கிக்கொண்டே இருப்பார்கள். இதில் கொலுசு வேறு - அடிக்கடி மாற்ற வேண்டுமாம்! ரொம்ப நாளாக நான் கேட்கும் வாட்ச் மட்டும் எனக்கு வாங்கித்தரவேயில்லை. 'இது வாட்ச் கட்ற வயசில்ல' என்று சொல்லிவிட்டார்கள். பொம்பளை பிள்ளைங்களுக்கு மட்டும் இப்போதிலிருந்தே நகை சேர்க்க வேண்டுமாம். இந்த அநியாயத்தை மட்டும் என்னால் பொருத்துக்கொள்ளவே முடியவில்லை. 'அவளுக்கு மட்டும் எட்டாயிரம் ரூபாக்கு நகை வாங்கியிருக்கீங்க. நான் கேட்ட வாட்ச் எவ்ளோ இருக்கப்போவுது...' என்றெல்லாம் நியாயம் கேட்டுப்பார்த்துவிடேன். இப்படி ஏமாற்றுகிறார்களே என ஆத்திரம் பொங்கும். ரொம்ப நாள் வரைக்கும், அவளுக்கு என்னென்ன எவ்வளவு ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள் என்று ஒரு நோட்டின் கடைசி பக்கத்தில் எழுதி வைத்திருந்தேன்!

ஏதேதோ யோசித்தபடி எப்போது தூங்கினேன் என்று எனக்கேத் தெரியாமல் தூங்கிவிட்டிருந்தேன். விடியற்காலையில் எங்கள் ஊர் வந்ததும் யாரோ எழுப்பி விட்டார்கள். அரைத்தூக்கத்திலேயே பஸ்ஸிலிருந்து இறங்கி, வீட்டுக்கு நடந்து, காத்திருந்த அப்பா வந்து கேட் திறக்க, உள்ளே சென்று மறுபடியும் படுத்துத் தூங்கிவிட்டேன்.

காலையில் அம்மா காபியுடன் வந்து எழுப்ப, 'ஆஹா... ஆரம்பமாயிடுச்சுடா விருந்து' என்று நினைத்தபடி சோம்பலுடன் எழுந்து பெட் காபியை அனுபவித்துக் குடித்தேன். பாப்பு இன்னும் சுருண்டு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். என் பெட்டியிலிருந்து துவைக்கவேண்டிய துணிகளை எடுத்துக்கோண்டிருந்த அம்மாவுக்கு அதைப்பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை.

'என்னடா இது... வளையல் மாதிரி இருக்கு...' என்றபடி அந்தப் பார்சலைப் பிரித்தார்கள்.

'ஆமாம்மா... வளையல்தான். போன சன்டே ஷாப்பிங் போனமா... அப்போ பாத்தேன். டிசைனெல்லாம் போட்டு வித்தியாசமா இருந்திச்சா, நம்ம பாப்புக்கு நல்லா இருக்குமேன்னு வாங்கினேன்...' என்றதும் அம்மாவுக்கு ஒரே பூரிப்பு.

'ஏங்க... இங்க வாங்களேன்...' என்று அப்பாவை கூப்பிட்டுக் காட்டி,

'நாம அவளுக்கு எதாச்சும் வாங்கினாலே சண்டைக்கு வருவான், இப்ப பாருங்க அவனே வங்கிட்டு வந்திருக்கான்...!' என்றார்கள்.

அப்பா முகத்திலும் பெருமிதம்.

'பின்ன என்னடி... இன்னும் அவன் சின்னப்பையனா என்ன..?! பெரியமனுஷன் ஆயிட்டான்ல...!' என்று கிண்டலாக என்னைப் பார்த்துச் சிரித்தார்.

எனக்கு ஒரே வெட்கமாகப் போய்விட்டது. வாழ்க்கையில் இன்றுதான் எனக்கு முதல் முதலாய் வெட்கம் வருகிறது என்று நினைக்கிறேன்!
Read More

12 June 2006

நாங்க போட்ட நாடகம் 2

முதல் பகுதி இங்கே...

ரு வழியாக ஒத்திகைகள் முடிந்து அரங்கேற்ற நாளும் வந்தது. முன்னரே திட்டமிட்டபடி, அன்று காலையிலேயே ஒவ்வொருவராக, ஆனதாண்டவபுரம் வினோத் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தோம். வீடு நல்ல விசாலமாய் இருந்தது. ஓட்டு வீடுதான் என்றாலும் பெரிய திண்ணைகள், விசாலமான ஆளோடி, வீட்டின் நடுவே மழை வெயில் காற்று எல்லாம் கொண்டு தரும் வாசல் என வசதியாய் இருந்தது. இந்த எல்லா இடங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தென்பட்டனர். வினோத்தின் நண்பர்கள் என்பதால், நாங்கள் மட்டும் அவனுடைய அறைக்கு வந்துவிட்டோம். ராஜேஷ் வாய்ப்பாட்டுக்கும் பெயர் கொடுத்திருந்ததால் வெளியில் தனியாய் ப்ராக்டிஸ் செய்துகொண்டிருந்தான்.

எங்கள் அறையின் கதவை சாத்திவிட்டு, எல்லோரையும் ஒருமுறை தனித்தனியாக அவரவர் காட்சிகளை ஒத்திகை பார்த்துக்கொள்ளும்படி விரட்டிக்கொண்டிருந்தான் பாலாஜி-

'எல்லாரும் டயலாக் பேப்பர் வச்சிருக்கீங்கல்ல. ஒருவாட்டி உங்க சீனையெல்லாம் அப்படியே மனசுல ஓட்டிக்கங்க...'

நானும் வினோத்தும் அதை பெரிதாய் கண்டுகொள்ளாவிட்டாலும், ஜூனியர் மாணவர்கள் ரொம்ப சிரத்தையாய் பாலாஜியின் வார்த்தையைப் பின்பற்றினார்கள். ஆளுக்கொரு மூலையில் தனித்தனியாய் நின்றுகொண்டு சின்னச்சின்ன அசைவுகளுடன் தங்கள் வசனங்களை மெதுவாய் சொல்லிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எக்ஸாமுக்கு முன், எக்ஸாம் ஹால் வாசலில், அவசர அவசரமாய் படிக்கும் மாணவர்களைப்போல் இருந்தது அவர்களைப்பார்க்க. இதில் இரண்டுபேர் நடுநடுவே டிஸ்கஷன் வேறு!

செந்தில் ஒரு ஓரமாய் தீவிரமான சிந்தனையில் இருந்தான். முதல் நாடகமல்லவா, நேரம் நெருங்க நெருங்க ரொம்ப டென்ஷன் ஆகிறான் போல. கூர்ந்து கவனித்தால், சின்ன இடைவெளிகளில், லேசாய் தலையையும் கழுத்தையும் திருப்பிக்கொள்வது தெரிந்தது. 'வினோத்து... அங்க பாரேன், மச்சான் மனசுக்குள்ள ரிகர்சல் பண்ணிக்கறான்...' என்றேன் சன்னமாய் சிரித்துக்கொண்டே. பார்த்த வினோத்.

இங்கு வந்ததிலிருந்து எனக்கும் பாலாஜிக்கும் ஒரு டவுட். ஊருக்குள் எங்குமே ஒரு விழாவுக்கான அறிகுறியே இல்லையே என. வினோத்திடம் கேட்டோம்.

'இன்னிக்கு ஒன்னும் விழா இல்லடா. இன்னிக்கு போட்டி மட்டும்தான். அடுத்த வாரம்தான் விழா. இன்னிக்கு ஜெயிக்கறவங்கள அன்னிக்கு கூப்பிட்டு சீஃப் கெஸ்ட் கையால ப்ரைஸ் கொடுப்பாங்க...' என்றான்.

அப்போதே எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. ம்... அப்போ ரொம்ப ஆடியன்ஸ் எதிர்பாக்க முடியாது!

'ஏன்டா வினோத்... டிராமாக்கு இன்னும் எத்தன டீம் வந்திருக்கு. உங்கப்பாகிட்ட கேட்டியா..?' - பாலாஜி.

'கேட்டேன்டா. நானும் போட்டில இருக்கறதால சொல்லமாட்டேன்னுட்டார்.'

'அடப்பாவி... அவ்ளோ நேர்மையான ஆளா..?! இவர நம்பித்தானடா கண்டிப்பா ப்ரைஸ் கிடைக்கும்னு வந்தோம்..!'

'அதெல்லாம் ரொம்ப எதிர்பாக்காதடா.' என்று குண்டைத்தூக்கிப்போட்டான் வினோத்.

சட்டென வெளியில் சலசலப்பு அடங்கி அமைதியாக, கர்நாடக சங்கீதத்தில் யாரோ பாட ஆரம்பித்தார்கள். 'யார்ரா இவ்ளோ சத்தமா ப்ராக்டிஸ் பண்றா...' என்று நினைத்தபடி, மெதுவாய் கதவைத்திறந்து எட்டிப்பார்த்தோம்.

அங்கே ஒரு பையன் சப்பளங்கால் போட்டு அமர்ந்து பாடிக்கொண்டிருக்க, சற்று இடைவெளிவிட்டு அமைதியாய் மற்ற மாணவர்கள் அமர்ந்திருந்தார்கள். எதிரில் ஈஸிச்சேர் போட்டு அமர்ந்திருந்த வினோத் அப்பா, கையில் ஒரு பேட் வைத்துக்கொண்டு ஏதோ குறித்துக்கொண்டிருந்தார்.

'அடப்பாவிகளா... போட்டி ஆரம்பிச்சிடுச்சிடா..! டேய் வினோத், உங்க வீட்லதான் போட்டியா..? டிராமா எங்கடா போடுவிங்க...?!!' - அதிர்ந்துவிட்டான் பாலாஜி. நாங்களும் குழப்பமாய் வினோத் முகத்தையே பார்த்தோம்.

'எனக்கென்னடா தெரியும். இதெல்லாம் எங்கப்பா எங்கிட்ட சொல்ல மாட்டாருடா. வாய்ப்பாட்டு இன்டிவீஜுவல் பெர்பாமன்ஸ் தான. அதனால வீட்லையே வச்சிருப்பார். நாடகமெல்லாம் இங்க இருக்காதுடா. பக்கத்து கோயில்ல ஒரு மேடை இருக்கு. அனேகமா அங்கயாத்தான் இருக்கும், கவலப்படாதீங்க...' என்று சமாதானப்படுத்தினான் வினோத்.

'அனேகமாவா...! எனக்கென்னவோ நம்பிக்கையில்லை...' என்றேன்.

'நீவேற சும்மா இருடா... பின்ன இங்க எங்க இடம் இருக்கு டிராமா போட...' - கண்களால் வீட்டை அளந்தபடி வினோத்தை ஆமோதித்தான் பாலாஜி. நாங்களே குழம்பிக்கொண்டிருப்பதைப் பார்த்து செந்தில் ஆடிப்போயிருந்தான்.

ஒவ்வொருவராய் நடுவில் வந்தமர்ந்து பாடி முடிக்க, 'ம்... அடுத்து இன்ஸ்டூமெண்டல் சோலோ... யாருப்பா கோகுல்...' என்றார் வினோத் அப்பா. கும்பலிலிருந்து மிருதங்கத்துடன் எழுந்து நடுவுக்கு வந்த அந்தப் பையன் கோகுலாக இருக்கவேண்டும்! நான் மெதுவாய் திரும்பி வினோத்தைப்பார்த்தேன். 'இதுவும் சோலோ தாண்டா...' என்று பல்லைகடித்துக்கொண்டு முனுமுனுத்தான். நான் பேசாமல் திரும்பிக்கொண்டேன்.

இப்படியே ஒவ்வொரு போட்டியாய் முடிந்தது. 'அடுத்து நாடகம்...' என்றபடி வினோத் அப்பா எழுந்துகொண்டார். 'அப்பாடா... எழுந்துவிட்டார். நாடகம் இங்க இல்ல...' - அப்போதுதான் எனக்கு நம்பிக்கையே வந்தது.

'நாடகத்துக்கு ரெண்டு டீம் வந்திருக்கு... ஒன்னு CVC காலேஜ், மயிலாடுதுறை(எங்களோடது!), இன்னொன்னு அரசு கலைக்கல்லூரி கும்பகோணம்...' என்று அறிவித்தார்.

'ரெண்டே டீம் தானா..?!' ஏமாற்றமாய் என்னைப்பார்த்தான் பாலாஜி. 'கவலப்படாதடா, வினோத் அப்பா நமக்கு ஹெல்ப் பண்ணாட்டிகூட நமக்கு ப்ரைஸ் உண்டு...' என்ற என்னை ஏளனமாய் பார்த்த செந்திலுக்கும் எங்களுக்கும் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

'அகர வரிசைப்படி முதல்ல அரசு கலைக்கல்லூரி... ரெடியாப்பா..?' என்று அவர்களை அழைத்தபடி, 'தம்பி... அந்த அண்டா, பக்கெட்டு, பானையெல்லாம் எடுத்து வெளில வைங்க...' என்று நடு வாசலைக்காட்டி தனது அடுத்தடுத்த கட்டளைகளை அசராமல் பிறப்பித்துக்கொண்டிருந்தார் வினோத் அப்பா!

சகலமும் ஒடுங்கிப்போயிறு எங்களுக்கு. ஆக, நடுவாசலில் இறங்கித்தான் நாடகம் போடவேண்டுமென்பது தெளிவாக முடிவாகிவிட்டது. என்னால் செந்தில் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. 'டேய் ஸ்கிரீன் இல்லாம எப்படிடா நந்தி செட் போடுவிங்க..!' வெலவெலத்துவிட்டான் செந்தில். 'இப்ப ஒன்னும் பண்ண முடியாதுடா... அட்ஜஸ் பண்ணிக்க...' - வேறென்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஏக டென்ஷனில் என்னை முறைத்த செந்திலைக் கண்டும் காணாமல் திரும்பிக்கொண்டேன்.

வினோத் அப்பா ஈஸிச்சேரைத் திருப்பி வாசல் பக்கம் போட்டுக்கொண்டார்(இதற்குத்தான் எழுந்தார் போலும்!). பக்கத்தில் ஒரு நாற்காலியையும் இழுத்துப்போட்டு, 'குமரேசு... பக்கத்துல ரெண்டுவீடு தள்ளி வாத்தியார் வீடு தெரியும்ல... பரந்தாமன் வாத்தியாருடா. ஓடிப்போயி அவர கூட்டியா... ஒடு...' என்று ஒரு பையனை ஏவினார். நாடகத்துக்கு இன்னொரு ஜட்ஜாம்!

இதற்குள் வாசல் சுத்தம் செய்யப்பட்டிருக்க, திண்ணைப் பக்கமிருந்து அரசு கலைக்கல்லூரி டீம் மேக்கப்புடன் வந்துகொண்டிருந்தது. பாலாஜி எங்களை அறைக்குள் அழைத்தான்.

'சரி விடுங்க. யாரும் அப்செட் ஆகவேண்டாம். வந்ததுக்கு நம்ம காலேஜ் பேர காப்பாத்திட்டு போகனும். எல்லாரும் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக்கங்க... அவங்கவங்க காஸ்டியூம் கொண்டாந்திருக்கீங்கல்ல..'

அவரவர் தங்கள் பேக் திறந்து ட்ரஸ் மாற்றிக்கொள்ள ஆரம்பித்தோம். செந்திலுக்குத் தனியாக ட்ரஸ் எதும் இல்லை. போர்வை போர்த்தப்போவதால் போட்டிருக்கிற போண்ட் ஷர்ட் போதும் என்று சொல்லியிருந்தோம். எனக்கு ஊர் நாட்டாமை வேஷம். எஜமான் ரஜினியையும், சின்னக் கவுண்டர் விஜயகாந்தையும், பல படங்களில் சரத்குமாரையும் மனதில்வைத்து அதேபோல கதர்சட்டையும் வேஷ்டியும் கொண்டுவந்திருந்தேன். பச்சை கலர் பட்டை பெல்ட் வேறு. ஒரு பில்டப்புக்கு, பேண்டேஜ் மேல் கருப்பு மையில் நனைத்து காயவைத்த பஞ்சை ஒட்டி நாங்களே தயாரித்த மீசையை ஒட்டிக்கொண்டு, ஒரு கெத்துடன் திரும்பி பாலாஜியை லுக் விட்டேன். அவன் என்னை கவனிக்காமல், 'அய்யோ... என்ன எழவுடா இது....' - சலிப்பின் உச்சத்தில், பிராமின் வேஷம் போட்டிருக்கும் ஒரு ஜூனியரைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டிருந்ததன். அப்புறம்தான் நானும் கவனித்தேன். கட்சி கரைவேட்டி கட்டிக்கொண்டு பூணூல் மாட்டிக்கொண்டு நின்றிருந்தான் அந்தப் பையன்!

'எங்கப்பாகிட்ட இந்த வேட்டிதான்ண இருந்திச்சி...' என்றான் அவன் பயந்துபோய்.

'முன்னாடியே எங்கிட்ட சொல்லியிருக்கலாம்ல...' என்று முறைத்த பாலாஜியை, இந்த ஸ்டேஜ்க்கு இது போதும் என்று சமாதானப்படுத்தினேன்.

மேக்கப் முடித்தபின், ஜன்னல் வழியாக அந்த டீமின் பெர்பாமன்ஸ் பார்த்தோம். சுத்தமாக வேறு கோணத்தில் காட்சிகளை அமைத்திருந்தார்கள். அட இப்படிக்கூட பண்ணியிருக்கலாமே என்று அப்போதுதான் தோன்றியது! இதற்கே கர்நாடக சங்கீதம் பாடத்தெரிந்தவரில்லை அவர்களுடைய நந்தனார். நந்தி செட்கூட இல்லை. இவர்களுக்கு முன்னால் நந்தி இருப்பதாயும், அது விலகுவதாயும் இவர்களின் ரீயாக்ஷனிலேயே காண்பித்திருந்தார்கள். இதே விஷயங்களைக் கவனித்து, 'டேய் அவங்க நந்தனார் ஒழுங்கா பாடவேயில்லை. நம்ம ராஜேஷ் கலக்கிடுவான். அதோட நந்தியே இல்லை அவங்க டிராமால...' என்று சிரித்த வினோத்தை நான் பாவமாக பார்த்தேன்.

ஆடியன்ஸையும் கவனிக்கத்தவறவில்லை நாங்கள். வாசலைச்சுற்றி, வேறு போட்டிகளில் பங்குபெற்ற பத்துப்பதினைந்து பள்ளி மாணவர்கள்(FYI: போட்டி முடிவை இன்றே அறிவித்துவிடுவதாக வினோத் அப்ப சொல்லியிருக்கிறார்!), கூத்து பார்க்கும் கணக்காய் அந்த கிராமத்து மக்கள் சிலர். ஆனாலும், மத்த போட்டிகளைவிட நாடகத்துக்குக் கொஞ்சம் கூட்டம் ஜாஸ்த்திதான். உள்ளே இடமின்றி ஜன்னல் வழியாகவெல்லாம் சிலர் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்துவீட்டு மாடியிலிருந்துகூட, திறந்த வாசலின் மேல் வழியே சிலர் பார்த்ததாக நாடகம் முடிந்து திரும்பும்போது ஒரு ஜூனியர் சொன்னான்!

மொத்த கூட்டத்திலும் ஒரே ஒரு figure தான் தேறியது. ஆனால் அவள் ஒருத்தி போதும் அந்த கிராமத்துக்கே. அந்தப் பச்சை தாவனி, கிராமத்துக் கிளி, ஓரமாய் ஒரு தூணில் ஓவியம்போல் சாய்ந்திருந்தாள்(அட... கவித! கவித!). எனது ராசி இது. எங்கே போனாலும் கண்டிப்பாக ஒரு figure மாட்டும். அது யாரென வினோத்திடம் அப்புறம் விசாரிக்கவேண்டும் என்று நினைத்துக்கோண்டேன். அதைவிட முக்கியம், ஒருமுறையேனும் இந்த நாட்டாமை ட்ரஸ் இல்லாமல் எனது சாதாரண உடையில் அவளின் கண்ணில் பட்டுவிடவேண்டும்!

அடுத்து நாங்கள் அழைக்கப்பட, போய் மேடையேறினோம்(அல்லது வாசலிறங்கினோம்!). ஸ்கிரீன் இல்லாதது எங்களுக்கேக் கொடுமையாய் இருந்தது. எல்லோரும் பார்க்கும்படி மேடையில் அசம்பில் ஆவதும், பாலாஜி சைகை கொடுக்க காட்சி ஆரம்பிப்பதுமாய் இருந்தது. நாங்களாவது பரவாயில்லை. செந்தில்தான் பாவம். எல்லோர் முன்னிலையிலும் நடுவாசலில் இறங்கி நந்திமாதிரி உட்கார்ந்தான். சுற்றியிருந்த சின்ன குழந்தைகள் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நந்தி தலை தனியே தயாரித்திருக்க வேண்டாம். அவன் முகமே ஏக கடுப்பில் இறுகிப்போய் நந்திமாதிரிதான் இருந்தது. என்னை என்னவெல்லாம் சொல்லித் திட்டிக்கொண்டிருக்கிறானோ! அவன் அப்படி அமர்ந்ததும் ஒருவன் ஓடிவந்து அவன்மீது ஒரு கருப்பு போர்வை போர்த்தினான். இன்னொருவன் அட்டையில் செய்த நந்தி தலையை அவன் தலையில் மாட்டினான். குழந்தைகள் ஓவராய் சிரிக்க ஆரம்பிக்க, வினோத் அப்பா அவர்களைப்பார்த்து முறைத்தார்.

பாலாஜி சைகை கொடுக்க, ராஜேஷ் பாட ஆரம்பித்தான். பக்கத்தில் நாங்கள் - நாட்டாமை, ஊர் பெரிய மனிதர்கள் என நின்று நந்தனார் பாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். நடுவில் நந்தி அசையாமல் சிலை மாதிரி இருந்தது. பாவி மூச்சு விடுகிறானோ இல்லையோ தெரியவில்லை. பரவாயில்லை, நன்றாகத்தன் ப்ராக்டிஸ் பண்ணியிருக்கிறான்!
இதோ ஆயிற்று இரண்டு நிமிடம். நந்தி அசையப்போகிறது. நாங்கள் ஆச்சர்யப்பட தயார் ஆனோம்.

ஆனால் நாங்கள் உண்மையில் ஆச்சர்யப்படும்படி, நந்தி அசையவே இல்லை. என்ன ஆயிற்று இவனுக்கு. catchword-ஐ மிஸ் பண்ணிவிட்டானா?! ஆனால் ராஜேஷும் பாடிக்கொண்டே இருகிறான்!

நேரம் போய்க்கொண்டே இருந்தது.

நான்கு நிமிடங்கள்...

ஐந்து நிமிடங்கள்...

ஆறு நிமிடங்கள்...

ம்ஹூம். நந்தி நெளிய ஆரம்பித்துவிட்டது! அப்போதும் ராஜேஷ் நிறுத்துவதாய் இல்லை.

ஏழாவது நிமிடம்...

நந்தி உள்ளே கால் மாற்றி நிற்க ஆரம்பித்தது!

ராஜேஷ் விடுவதாய் இல்லை. உண்மையிலேயே பக்கத்தில் ஏதும் நந்தி இருந்தால் விலகிவிடும் போலிருந்தது. அவ்வளவு சீரியஸாய் பாடிக்கொண்டிருக்கிறான்!

செந்திலின் நிலை பார்த்து எனக்கு அடக்கவே முடியாமல் சிரிப்பு வந்தது. அப்படியொரு தர்ம சங்கடமான நிலை எனக்கு வந்ததேயில்லை. ரொம்பக் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டேன். அப்படியும் எனது குலுங்கிய முதுகும், கட்டுப்படுத்திய உதடுகளையும் மீறிப் பீரிடும் சிரிப்பும் காட்டிக்கொடுத்துவிட, அதை பாலாஜி பார்த்துவிட்டான். முறைப்பான் என பயந்தேன். அட அவனும் சிரிப்பை அடக்கிக்கொண்டிருக்கிறான்!

கிட்டத்தட்ட பத்துப்பதினைந்து நிமிடங்கள்! நந்தி ஒரு டான்ஸே ஆடிவிட்டது. கட்டக் கடைசியாய் வந்தது அந்த catchword! விட்டால் போதுமென்று நந்தி சாய்ந்து படுத்துக்கொண்டது. எங்களுக்குக் கூட அப்படித்தான் இருந்தது. எவ்வளவு நேரம்தான் சிரிப்பை அடக்குவது?!

ஒருவழியாக எல்லாம் முடிந்து செந்திலை எழுப்பியபோது, அவன் கண்கள் பிதுங்கியிருந்தன. வாயில் நுரை தள்ளாத குறைதான்! பாவம் ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டான். கால் மறத்துப்போய் அவனால் நடக்கவே முடியவில்லை. நான் தான் கைத்தாங்கலாய் அழைத்துச்சென்றேன்!

எங்கள் அறைக்கு வந்ததும் மாற்றி மாற்றி ராஜேஷைப் பிடித்து ஏற ஆரம்பித்தோம். படுபாவி, பதிமூன்று நிமிடப்பாடலை, ரிகர்ஸலுக்கு இது போதுமென்று, கடைசி இரண்டு நிமிடங்களை மட்டுமே எங்களுக்குப் பாடிக்காட்டியிருக்கிறான்! குறைந்தபட்சம் எங்களுக்குச் சொல்லவேண்டுமா இல்லையா? கேட்டால், இதுகூடத் தெரியாமலா ஸ்கிரிப்ட் எழுதினீர்கள் என்று எங்களைக் கேட்கிறான்! ஆஹா.. இது backfire ஆகிவிடும் போலிருக்கே என்று அந்த மேட்டரை அப்படியே அமுக்கிவிட்டோம். பாலாஜி செந்திலிடம் ஸாரி கேட்டான்.

'பரவால்ல விடு பாலாஜி. என்னால எதும் பிரச்சனை ஆகாம இருந்தா சரி. நான்கூட பயந்துபோய்ட்டேன். நான் catchword மிஸ் பண்ணிட்டதாலதான் அவன் திரும்பத்திரும்பப் பாடறான்னு!' என்றான்.

கடைசியில் எங்களுக்கு இரண்டாவது பரிசுதான் கிடைத்தது. அது கூட எப்படிக் கிடைத்தது என்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அது பத்மாவுக்குத் தெரியாதே! அதுதான் எங்களுக்கு ஒரே ஆறுதல்.

அடுத்தநாள் காலையில் வந்ததும், நாங்கள் பரிசு வாங்கிய மேட்டரை மிகப்பெருமையுடன் நோட்டீஸ் போர்டில் எழுதிப்போட்டுவிட்டோம். இன்று பத்மா வருவாள். பார்த்து வயிறெரிவாள். ஒரே ஆனந்தம் தான் எங்களுக்கு. நேற்று பட்ட கஷ்டமெல்லாம் மறந்துபோயிற்று. எப்போதடா மதியம் வரும் எனக்காத்திருந்தோம். மதியம் வந்ததும் நோட்டீஸ் போர்டு பக்கத்திலேயே எத்தேச்சையாக நிற்கிறமாதிரி நின்றோம். அப்போதுதானே பத்மாவின் வயிற்றெரிச்சலை கண்குளிற பார்க்க முடியும்!

அதோ... பத்மா வருகிறாள். நோட்டீஸ் போர்டு பார்த்து நிற்கிறாள். அனைத்தையும் படிக்கிறாள். ஆனால் நாங்கள் நினைத்தது போலில்லாமல், எங்களை ஏறிட்டுப்பார்த்து மிக அலட்சியமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டுப் போகிறாள்!

எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நொந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தோம். அடக்கொடுமையே! அவளின் பின்னே வாய்பொத்தி அடக்கமாய் சிரித்துக்கொண்டு செல்லும் அந்த மஞ்சள் தாவனி - நேற்று தினேஷ் வீட்டில் நான் சைட் அடித்த பச்சை தாவனி!
Read More

06 June 2006

நாங்க போட்ட நாடகம்

(சற்றே பெரிய சிறுகதை)

அந்த நாடகப்போட்டியில் கலந்துகொள்ள நாங்கள் முடிவுசெய்ததற்கு இரண்டு மிக முக்கியமான காரணங்கள் இருந்தன. முதலாவதும், மிக முக்கியமானதுமான காரணம் எங்கள் எதிரி(பின்னே... நாங்கள் போட்டியிடுகிற அத்தனை மேடையிலும் எங்களை ஜெயிக்கிறவள் எங்கள் எதிரிதானே?) பத்மா & கோ அந்த போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை! இரண்டாவது, அந்த போட்டிக்கு நடுவராக வரப்போகிறவர் எங்கள் டீமில் இருக்கும் வினோத்தின் அப்பா!! இது போதாதா, நாங்கள் இரண்டாவது பரிசாவது வாங்கிவிட?! இந்தமுறை கிட்டத்தட்ட முடிவை எழுதிவைத்துக்கொண்டுதான் நாங்கள் களத்தில் இறங்கினோம்.

மயிலாடுதுறை பக்கத்தில் ஆனதாண்டவபுரம் என்ற ஊரில் "கோபால கிருஷ்ண பாரதி விழா" ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறதாம். தமிழில் முதன் முதலில் நலுங்குப் பாடல்கள் பாடியது கோபால கிருஷ்ண பாரதிதானாம்(இனிமேல் கோ. கி. பா. ஓக்கேவா?!). கோ. கி. பா வின் வாழ்வில் ஒருபகுதி, ஆனதாண்டவபுரத்தில் கழிந்ததால் அவர் பெயரில் ஆண்டுதோறும் அங்கு விழா எடுக்கிறார்களாம். இந்த வருடம் வினோத்தின் அப்பா(விழா கமிட்டியின் மெம்பர்!) சொன்ன யோசனையின்படி கல்லூரிகளுக்கிடையேயான இசை, நடனம் மற்றும் நாடகப்போட்டி வைக்கிறார்களாம். இவற்றைச்சொன்னபோதே பத்மா இந்த போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்பதையும் வினோத் சொல்லிவிட்டான்.

போட்டிக்கான அறிவிப்பு officiaலாய் வந்ததும், எங்கள் கல்லூரியின் நுண்கலை மற்ற(fine arts association) ஒருங்கிணைப்பாளர் K.V எனப்படுகிற, பேராசிரியர் K. வேலாயுதம்('சொம்பு'ன்னு சொன்னாதான் காலேஜ்ல முக்காவாசி பேருக்கு தெரியும். அவரை மொத்தமா பாக்க அப்படித்தான் இருக்காராம். எங்கள் முன்னோர்கள் வைத்த பெயர். நாங்கள் வழிமொழிந்துகொண்டிருக்கிறோம்!) அவர்களிடம் பெயர் கொடுக்க சென்றபோது பத்மா இந்த போட்டிக்கு வரவில்லை என்பதை கீழ்கண்டவாறு உறுதிசெய்துகொண்டோம்.

அவர் பெயர் எழுதிக்கொண்டிருந்த பேப்பர் வெறுமையாய் இருப்பதை பார்த்துக்கொண்டே பாலாஜிதான் கேட்டான் -

'ஈவினிங் காலேஜ்-ல யாரும் பேர் கொடுக்கலீங்களா சார்...?'

யாரும் என்ன யாரும். அவளைத்தவிர வேறு யார் வரப்போகிறார்கள். இருந்தாலும் அவள் பேர் சொல்லி கேட்க அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை போலும். ஆனாலும் அவர் ஓப்பனாய் சொல்லி மானத்தை வாங்கிவிட்டார்.

'இல்லப்பா. பத்மாதான் லீவ்ல இருக்கால்ல. அவ இல்லாம அவ டீம் வரலன்னு சொல்லிட்டாங்க...'

ஆமா. டீம் பெரிய டீம். அவங்க டீமுக்கு பத்மா மேல அவ்ளோ பாசம்னெல்லாம் நினைச்சிடாதீங்க. அங்க வேற எவளுக்கும் ஸ்கிரிப்ட் எழுதி டைரக்ட் பண்ணத்தெரியாது! ஆனா எங்க டீம்ல எல்லாரும் டைரக்டர்தான்(அதனாலதான் சொதப்பிக்கிதோ?!).

எப்படியோ, இம்சை, வராமல் வயிற்றில் பாலை வார்த்தாள். அப்போ தியாகு சொன்ன தகவல் நிஜம்தான். தியாகுவிற்கு வித்யா மூலம் தெரிந்திருக்கலாம். எங்க டீம் தியாகுவுக்கும் அவங்க டீம் வித்யாவுக்கும் வெகு சீரியஸாய் ஒரு லிங்க் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கள் டீம் தோற்றால் அவள் கண்கள் கலங்கிவிடும். அவங்க டீம் தோற்றால் இவன் கண்கள் கலங்குமா எனத்தெரியவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு சந்தர்ப்பம் இதுவரை வரவேயில்லை! :(

எங்கள் கல்லூரியில் இது ஒரு வசதி. டே காலேஜ், ஈவினிங் காலேஜ் என்று இரண்டு கல்லூரிகளாக இயங்குகிறது. டே காலேஜ் பசங்களுக்கு. ஈவினிங் காலேஜ் பொண்ணுங்களுக்கு. PG மட்டும் கோ-எட். இதனால் எல்லா இன்டர் காலேஜ் போட்டிகளிளும் டே காலேஜ், ஈவினிங் காலேஜ் என்று இரண்டு அணிகளாய் போட்டியிடுவோம். ஈவினிங் காலேஜ் என்றால் பொழுதுசாய ஆரம்பித்து இருட்டியபின்னெல்லாம் விடமாட்டார்கள். எங்களுக்கு 9 to 2, அவங்களுக்கு 1 to 5. சனிக்கிழமை அவங்களுக்கு மட்டும் full day. பெரும்பாண்மையான எங்கள் ஒத்திகைகளை சனிக்கிழமையில்தான் வைத்துக்கொள்வோம். அன்றைக்குத்தான் எங்கள் கல்லூரி, பெண்களின் முழு ஆக்கிரமிப்பில் ஜகஜோதியாய் இருக்கும். சைட் அடிக்க வசதியான எங்களின் இந்த ஏற்பாட்டுக்கு ஆசிரியர்களுக்கு மத்தியில் நல்ல பேர் வேறு. வகுப்புக்கு OD கேட்க்காமல் விடுமுறையில் ஒத்திகை செய்துகொள்கிறோமாம்! ஞாயிறும் விடுமுறைதானே. அன்னிக்கு ரிகர்சல் வச்சுப்பாத்தா தெரியும். ஒரு பய வரமாட்டான்(என்னயும் சேத்துதான்!).

சரி மேட்டருக்கு வருவோம். நாடகத்திற்கு தீம் அவர்களே கொடுத்துவிட்டார்கள்(அப்பாடா... எங்களுக்குள் தகராறு இல்லாம ஒரு மேட்டர் ஓவர்!). கோ. கி. பா. எழுதிய 'நந்தனார் சரித்திர கீர்த்தனை' வெகு பிரசித்தம் என்பதால், நந்தனார் வாழ்க்கை வரலாறு சம்பந்தமாகத்தான் நாடகம் இருக்கவேண்டுமாம். 'என்னடா இவர் வரலாறு...?!' என்று குழம்பிக்கொண்டிருந்த எங்களுக்கு, வினோத்தான் சொன்னான். நந்தனார் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவராம். தீவிரமான சிவ பக்தராம். மேல் ஜாதிக்காரர்கள் இவரை கோயிலுக்குள் அனுமதிக்காததால் வாசலில் நின்றே வழிபடுகிறார். நம்ம கோயில்லதான் 'நடுவுல நந்தி மாதிரி' ஒரு நந்தி இருக்குமே!(ஹ.. ஹா.. இங்கு எது கொடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது!) அதனால் சிவபெருமானை தரிசிக்க முடியாதுபோன நந்தனார், எனக்கு காட்சிதரமாட்டாயா சிவபெருமானே என மனமுருகிப் பாடுகிறார். அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத அந்த ஆச்சர்யம் நடக்கிறது. இவர் பக்தியை மெச்சிய சிவபெருமான் நந்தியை சற்று விலக்கி இவருக்கு காட்சிகொடுக்கிறார். ஆம், இவருக்காக நந்தி கொஞ்சம் விலகி நிற்கிறது! ஆகக்கூடி ஒன்றுமட்டும் புரிகிறது. சாமி கூட தாழ்ந்த ஜாதி பக்தனுக்கு கஷ்ட்டப்பட்டு கருங்கல் நந்தியை விலக்கியாவது காட்சிகொடுக்குமே தவிர, கோயிலுக்குள் அனுமதிக்காது!

போதுவாய் நானும் பாலாஜியும்தான் ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணுவோம். முதல்கட்ட வேலையாக நந்தனார் பற்றி நிறைய விஷயங்கள் சேகரித்தோம். என்னதான் எங்களுக்கு பரிசு நிச்சயமென்றாலும் அதற்கு ஒரு வேல்யூ இருக்கணுமில்லயா?! அதனால் கொஞ்சம் கஷ்டப்பட்டு நந்தனாரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்தோம். ஆனால் மேற்சொன்ன மேட்டர் தவிர்த்து, நந்தனார் வாழ்வில், சொல்லும்படி வேறொன்றும் சுவாரஸ்யமாய் இல்லை. அட இதை மெயின் ட்ராக்காக வைத்துக்கொண்டு சைடில் மைல்டாக ஒரு லவ் ட்ராக் இருந்தால்(பூவிழி வாசலிலே மாதிரி!) நல்லாயிருக்குமே என்று பார்த்தால், மனிதர் வாழ்க்கையில் அப்படி ஒரு மேட்டரே இல்லை! எனவே அந்த சம்பவத்தையே மையமாக வைத்து ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவது என ஒருமனதாக(வேற வழி!) முடிவுசெய்தோம். என்ன ஒன்று, எனது திறமையை(நான் காதல் வசனங்கள் எல்லாம் கலக்கலாக எழுதுவேன்னு மத்தவங்க சொல்வாங்க!) காட்ட இந்த நாடகத்தில் இடம் இல்லை. பரவாயில்லை என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

ஒருவழியாக ஸ்கிரிப்ட் எழுதி முடித்தாயிற்று. அடுத்தகட்டமாக, ஆர்ட்டிஸ்ட் செலக்ஷன். இதில் மெயின் கேரக்டர் என்று பார்த்தால் நந்தனார் மட்டுமே. நாடகத்தின் ஹீரோ அவர்தானே. அதில் யார் நடிக்கப்போவது என்று எங்கள் மனதிற்குள்ளாகவே ஒரு போட்டி. அதுவும் சும்மாவா... கண்டிப்பாக பரிசு வாங்கப்போகிற நாடகம் வேறு! இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள்தான் எங்கள் நட்பின் ஆழத்தை சோதனை செய்யும். ஒருவருக்கொருவர் என்னை அவன் முன்மொழிவான் என்று நானும், அவனை நான் முன்மொழிவேன் என்று அவனும் எதிர்பார்த்தபடி ஒரு முடிவுக்கு வராமல் மேட்டர் இழுத்துக்கொண்டிருந்தது. கடைசியாக நான்தான் பொதுப்படையாக ஒரு தீர்வு சொன்னேன்.

"நம்மளோட எய்ம் நாடகத்துல கண்டிப்பா ஜெயிக்கணும். அதும் first prize வாங்கணும். சோ, இந்த கேரக்டர்ல நாம நடிக்கிறத விட கர்நாடிக் நல்லா பாடத்தெறிஞ்ச நம்ம ராஜேஷ் நடிக்கறதுதான் பெஸ்ட். என்ன சொல்றீங்க...!"

"அவன் இதுவரைக்கும் நடிச்சதே இல்லையேடா...?" - வேஷம் கைநழுவிப் போய்விடுமோ என்ற ஏக்கத்துடன் பாலாஜி.

"பரவாயில்ல. நாம சொல்லி கொடுத்துக்கலாம். இதுல பெரிசா நடிக்க ஒன்னுமில்ல. முக்கியமா அந்த பாட்டை மனமுருக பாடணும். அதும் கர்நாடக சங்கீதத்துல. அவன்தான் வாய்ப்பாட்டுல எங்க போணாலும் first வரானே..."

"ஆமாண்டா... அது ஒரு பெரிய ப்ளஸ் நமக்கு..." - எப்படியும் நமக்கில்லை என்கிற நம்பிக்கையில் வினோத்.

ஒருவழியாக, அறைமனதுகளான அனைவரின் முழுமனதுடன், அந்த வேடத்தில் ராஜேஷ் நடிப்பதாய் முடிவாயிற்று. அவனைப்போய்க் கேட்டால் 'இதுவரைக்கும் நான் நடிச்சதில்லையேப்பா...' என விலகப்பார்த்தான். மேற்படி மேட்டரெல்லாம்(அதாங்க, கண்டிப்பா prize உண்டுங்கற மேட்டர்!) விளக்கி, 'அந்த பாட்டை மட்டும் வந்து உருப்படியா பாடு. மத்ததேல்லாம் நாங்க பாத்துக்கறோம்' னு சமாதானப்படித்தி உள்ள இழுத்து விட்டோம்.

அப்புறம்... நந்தி. அதற்கொன்றும் பெரிதாக போட்டியில்லை! கருப்பு போர்வை போர்த்தி நந்திமாதிரி படுத்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட வரியை நந்தனார் பாடும்போது சற்று தலைசாய்த்தபடி விலகுவதில் பெரிதாய் என்ன திறமையை வெளிப்படித்திவிட முடியும்?! குறைந்தபட்சம், அந்த கேரக்டரில் நடிக்கிறவர் யார் என்றுகூட பார்ப்பவர்களுக்கு தெரியப்போவதில்லை. எனவே நந்தியாக நடிக்க யாரும் முன்வருவதாய்த் தெரியவில்லை. 'சரி இது வேலைக்கு ஆகாது. புதுசா யரையாச்சும்தான் உள்ள இழுத்துவிடனும்' னு முடிவு பண்ணிட்டேன். ஆனா யார கூப்பிடலாம்...?! சரி நம்ம ரூம்மேட் செந்திலை ட்ரை பண்ணலாம்னு தோணிச்சு. செம ஜாலி பார்ட்டி அவன். எப்பவும் எங்களையும் எங்க நாடகத்தையும் கலாய்ச்சுகிட்டே இருப்பான். ஒருமுறை உள்ள வந்து பாத்தாத்தான் அவனுக்கும் எங்க கஷ்டம் தெரியும். நாங்கள்லாம் கடலை போடத்தான் fine arts ல இருக்கோமாம்(ஒரு விதத்துல அதென்னவோ வாஸ்த்தவம்தான்!). ஆனா, அவனுக்கும் நடிக்கனும்னு உள்ளுக்குள்ள ஒரு ஆசை இருக்குன்னு எனக்குத்தெரியும். நடிக்க ஆள் இல்ல, நீ வாடான்னு கேட்க்க முடியாது. ஈகோன்னு ஒன்னு இருக்கே. வேற மாதிரிதான் அப்ரோச் பண்ணணும்!

'மச்சி செந்திலு... புதுசா ஒரு டிராமா போடறோம். ஆர்ட்டிஸ்ட் செலக்ஷன் நடந்துகிட்டு இருக்கு. நா சொன்னா OK சொல்லிடுவாங்க. உனக்கு எதும் இன்ட்ரஸ்ட் இருக்கா..?' - மீன் சிக்குதான்னு ஒரு லீட் விட்டுப்பாத்தேன்.

'பெரிசா ஒன்னும் இன்ட்ரஸ்ட் இல்லடா. ச்சும்மா ஒரு ஜாலிக்கு வேணும்னா செய்யலாம்...' - ம்.. ம்.. மீன் சிக்குது. ஆனால் அதுக்கும் கொஞ்சம் ஈகோ. ஹும்... யாருக்குதான் இல்லை. OK சமாலிச்சுக்கலாம்!

'ஆனா ஹீரோவால்லாம் வேணாம் மச்சி...' - மீன் சீரியஸாய் நம்மள கலாய்க்குதாம்! 'வாடி மகனே வா. என்ன கேரக்டர்னு அங்க வந்து பாரு' என்று மனசுக்குள் சிரித்துக்கொண்டேன். எடுத்தவுடன் நந்தி வேஷம் என்று சொன்னால் பையன் ஓடிவிடுவான். கொஞ்சம் ஜாக்கிறதையாத்தான் ஹேண்டில் பண்ணணும்.

'உனக்கென்னடா... ஹீரோ மாதிரிதானே இருக்கே. நாலைக்கு காலைல ரிகர்சலுக்கு ஆடிட்டோரியம் வந்துறு. உனக்கு என்ன ரோல்னு அங்க பாத்துக்கலாம். ஓக்கேவா?!'

மறுநாள் காலை வேண்டுமென்றே வேறுவேலை வைத்துக்கொண்டு ஆடிடோரியம் செல்லவில்லை நான். செந்தில் அங்கு போனதும், பாலாஜியும் வினோத்தும் ரொம்ப சீரியஸாய் 'யேய் நந்தி வந்தாச்சுப்பா...' என்று அவனை பேசவிடாமல் அவசரப்படுத்தி, நந்தி கேரக்டரைச் சொல்லி தரையில் கவிழ்த்துப்போட்டிருக்கிறார்கள். இருவரையும் செந்திலுக்கு அதிக பழக்கமில்லாததால் வேறு வழியின்றி மாட்டிக்கொண்டான். சற்று நேரம் கழித்து நான் அங்கு போனபோது, செந்தில் மேடையின் நடுவே நந்தி மாதிரி சுறுங்கிக் கவிழ்ந்திருந்தான். பக்கத்தில் நந்தனார் பக்திப்பரவசத்துடன் பாடிக்கொண்டிருந்தார். சட்டென்று அந்த நிலையில் அவனைப்பார்க்க அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது. ட்ரெஸ்ஸிங் ரூம் போய் தனியே சிரித்துவிட்டு வந்தேன். திரும்பி வந்து பார்த்தபோது நந்தி எப்படி விலகவேண்டும் என்று பாலாஜியும் வினோத்தும் கவிழ்ந்திருந்த செந்திலின் கழுத்தைப் பிடித்து பெரேட் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னபடியெல்லாம் தலையையும் உடலையும் சாய்த்துக்கொண்டிருந்தான் அவன். இப்போது பார்க்க கொஞ்சம் பாவமாவே இருந்தது! ரிகர்சல் முடிந்து எழுந்த செந்தில் என்னைப்பார்த்துவிட்டான். 'நீ ரூமுக்கு வா உன்னை பாத்துக்கறேன்...' என்பதாய் இருந்தது அவன் பார்வை.

அவன் வெறுப்பு புரியாமல் பாலாஜி வேறு அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருந்தான் - 'நல்லா ஞாபகம் வச்சிக்கோ செந்தில். உன்ன அப்படியே ஒரு ஜடப்பொருளா feel பண்ணிக்கணும். ஒரு சின்ன அசைவு கூட தெரியக்கூடாது. நீ சாயிறப்போதான் ஒரு ஆள் அங்க இருந்ததாவே ஆடியன்ஸ்கு தெரியணும். டெய்லி ரூம்ல கூட கொஞ்சம் பிராக்டிஸ் பண்ணு. திரும்ப நாளைக்கு காலைல பாக்கலாம். ஓக்கேவா?'

'நாளைக்குமா...?!!!' என்ற அதிர்ச்சியிலும், என்மீதிருந்த கோபத்திலும் எதுவும் பேசாமல் பேய்விட்டான் செந்தில். இரவு அவனை சமாதானப்படுத்துவது பெரும்பாடாகிவிட்டது எனக்கு. கத்து கத்தென்று கத்தித் தீர்த்துவிட்டான். 'போன உடனே நந்தி வந்திருச்சிங்கறான். உண்மைய சொல்லு. நேத்திக்கே உனக்கு தெரியும்தானே...?' என்று திரும்பத்திரும்ப கேட்டான். 'கழுத்து இடுப்பேல்லாம் வலிக்குதுடா. கால் மறத்துப்போச்சு தெரியுமா...' - விட்டால் அழுதுவிடுவான் போலிருந்தது. நாளைக்கெல்லாம் வரவேமுடியாது என்றவனை, 'இனிமேல் புதுசா ஆள் பாத்து சொல்லிக்கொடுக்க டைம் இல்லடா', 'இந்த டிராமாவே உன்னை நம்பித்தான் இருக்கு', 'இதுல என்னடா தப்பு. எவ்ளோ வித்தியாசமான கேரக்டர் தெரியுமா', 'அடுத்த டைம் உனக்கு புடிச்சமாதிரி நல்ல கேரக்டர் வாங்கித்தறேன்' என்றெல்லாம் கெஞ்சி, ஒருவழியாக சம்மதிக்க வைத்தேன்.

அப்புறமென்ன... நந்தனாரை உள்ளே விட மறுக்கிற உயர்ந்த ஜாதிக்காரர்கள், 'மற்றும் பலர்'-ஆக நாங்கள், நுண்கலை மன்ற இசைக்குழுவிலிருந்து இசையமைக்க இரண்டுபேர் என எங்கள் ஒத்திகைகள் அமர்க்கலமாகத்தொடர்ந்தன. செந்திலுக்கு எல்லாம் தெளிவாய் சொல்லப்பட்டிருந்தது. அவனுடைய சீன் வரும்போது, ஸ்கிரீன் மூடியிருக்கும்போதே அவன் ஓடிவந்து மேடையின் நடுவே நந்தி மாதிரி படுத்துக்கொள்ள வேண்டும். இரண்டுபேர் ஓடிவந்து அவனுக்கு கருப்பு போர்வை போத்தி, 'நந்தி தலை' செட்டை மட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். அந்த சீன் முடியும்போது, விலகியிக்கிற நந்தியை எல்லோரும் வியந்து பார்த்துக்கொண்டிருக்க, ஸ்கிரீன் போட்டுவிடுவார்கள். பக்கத்தில் நிர்ப்பவன் எழுப்பிவிட, இவன் எழுந்துவரவேண்டியதுதான். செந்தில், எப்படியும் தன் முகத்தை யாரும் பார்க்கப்போவதில்லை என்கிற வகையில் கொஞ்சம் நிம்மதியாக இருந்தான்.

ஒத்திகைக்கு ராஜேஷ் மட்டும் அதிகம் வரமாட்டான். அவனுக்கான பாடலை அவன் வீட்டிலேயே பாடி பிராக்டிஸ் பண்ணிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான். அவ்வப்போது வந்து அந்தப்பாடலை மெய்மறந்து மனமுருகப்பாடுவதுபோல் பாடுவான். எளிய தமிழ்ப்பாட்டுதான் என்றாலும், 'படிச்சவன் பாட்ட கெடுத்தான்' கதையாக, கர்நாடக சங்கீதத்தில் பாடும்போது எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ராஜேஷ் பாட ஆரம்பித்து சரியாக இரண்டாவது நிமிடத்தில் அவன் குறிப்பிட்ட 'நந்தி மறைக்குதய்யா' என்று தொடங்கும் அந்த வரி வரும். அதுதான் செந்திலுக்கு catchword. அந்த வரியை பாடும்போதுதான் நந்தி விலவேண்டும். செந்திலும் அந்த வரியை நன்றாக மனப்பாடம் செய்துகொண்டான். தூங்கும்போது யாராவது அந்த வரியை சொன்னால்கூட சற்று விலகிப்படுத்துக்கொள்வான் போலிருந்தது!

அடுத்த பகுதி...


Read More