என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

28 September 2006

இருத்தலின் சாத்தியங்கள்





ரும்பிக்கொண்டே இருக்கின்றன
மொட்டுகள்-
புதிது புதிதாய்

மலர்ந்த சிலவும்
வாடத்துவங்கும்
மலர்ந்த நொடியிலிருந்தே

மலரும் வாய்ப்பும்
வாடும் நிதர்சனமும்
அறிந்தே அரும்பும்
புதிய மொட்டுகள்-
ஆதி அரும்பின் பரவசத்திற்கு
சற்றும் குறையாத பூரிப்புடன்!

பூங்கா அக்டோபர் 02, 2006 இதழில் இக்கவிதை தொகுக்கப்பட்டுள்ளது.
Read More

21 September 2006

காணக்கிடைக்கும் தெய்வங்கள்

வாழ்வில் அலுக்கவே அலுக்காத விஷயங்கள் என்று ஒவ்வொருவருக்கும் சின்னதாகவாவது ஒரு பட்டியல் இருக்கும். என்னுடைய அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, குழந்தைகளும் அவர்களின் குறும்புகளும்!

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். நான் புரிந்துகொண்டவரை கடவுள் என்பது ஒரு நிலை. கண்ணில் படுகின்ற எதையும், அவற்றின் மீதான எந்த கற்பிதங்களும் அற்று, அவற்றை அவைகளாகவே பார்க்கும் பாக்கியம் அந்த நிலையில் மட்டுமே வாய்க்கும். அந்த நிலையில் இருப்பவர்கள் குழந்தைகள் மட்டுமே. வாழ்வின் எல்லைகளை உணர்ந்து அடங்கிய, முதிர்ந்த வயதோரையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்!

மாலை வேளைகளில், எங்கள் அலுவலகத்தின் எதிர் வரிசையிலிருக்கும் ஒரு வீட்டின் வாசலில், குழந்தையாய்க் கனிந்துவிட்ட ஒரு முதியவர், சில மாதங்களேயான ஒரு கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருப்பார். நான் என்னை மறந்து பார்க்கும் காட்சி அது. இருவரின் முகங்களுக்கும் அதிகபட்சம் ஆறு வித்தியாசங்கள் கூட சொல்ல முடியாது! வேறு யாருக்கும் புரியாத, அவர்களுக்கு மட்டுமேயான ஒரு மொழியில் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். உள்ளம் மலர்ந்து சிரிக்கும் அந்த முகங்களைப் பார்க்கக் கிடைக்க, நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்வின் இரண்டு எதிரெதிர் விளிம்புகளும் ஒன்றானவையே என்று சொல்லாமல் சொல்லும் காட்சியது. அப்பப்பா... இடையில்தான் எவ்வளவு பிரச்சனைகள், அனுபவங்கள். குழந்தைப்பருவத்தின் உன்னதங்கள் உணர்ந்து மீண்டும் அப்படி மாற நம் வாழ்நள் முழுதும் தேவையாயிருக்கிறது நமக்கு!

நான் எனது குழந்தைப்பருவத்தைக் கடந்துகொண்டிருந்த நாட்களிலேயே, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைத்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும், விடுமுறையில் பாட்டி வீட்டிற்குச் சென்றால், மாமாவின் குழந்தை, சித்தியின் குழந்தை என்று மாற்றி மாற்றி கைக்குழந்தைகள் இருந்துகொண்டேயிருக்கும். அவர்களை விருப்பத்துடன் பார்த்துக்கொள்பவன் நான் என்பதால், அவர்களின் அம்மாக்கள் என்னிடம் விட்டுவிட்டு அவர்கள் வேலையை நிம்மதியாய் பார்ப்பார்கள். அக்காவின் குழந்தைகள், தங்கையின் குழந்தைகள் என்று இன்னமும் அது தொடர்கிறது. கூட்டுக் குடும்பமென்பதால், கைக்குழ்ந்தையில் இருந்து பள்ளி இறுதியாண்டு வரை, எப்போதும் எல்லா வயதிலும் குழந்தைகளுண்டு எங்கள் வீட்டில்.

நாம் உருவாக்கி வைத்திருக்கும் உலகின் கறைகள் படிந்துவிடாத ஓர் இயல்பான உலகின் தரிசனம், குழந்தைகளுடன் விளையாடும்போது கிடைத்துவிடுகிறது. அந்த உலகின் பொய்களும் கோபங்களும் கூட மிக அழகானவையாகவே இருக்கின்றன. மொழிகளற்றுப் பேசவும், சிரிக்கவும் அங்கே வாய்க்கிறது. மிக முக்கியமாக, அங்கு ஃபார்மாலிட்டி என்கிற ஒரு விஷயமே இல்லை! சக மனிதனிடத்தில் சதி, மதம், அந்தஸ்து என்று எந்த பேதமும் இல்லை!! உள்ளம் உணர்ந்ததை உடற்கூறுகள் சொல்லும் சுதந்திரம், அந்த வயதின் வரம்.

நாம் ஒவ்வொருவரும், நமக்கே தெரியாமல், சொல்லவொண்ணா துயரத்துடன் கடந்துவருகிற நம் வாழ்வின் நாட்கள் எவை தெரியுமா? நம் குழந்தைப் பருவத்தைக் கடக்கிற நாட்கள் தான். அதிலும் குறிப்பாக, ஓஷோ சொல்வது போல், பள்ளிக்கு கொண்டுவிடப்படுகிற நாட்கள்! அங்கேதான், இயற்கை அளித்த நமக்கேயான நம் பாதையிலிருந்து விலகி, முற்றிலும் கற்பிதங்களினாலான ஒரு பாதையில் செல்ல நாம் வற்புறுத்தப்படுகிறோம். நமக்கு இயல்பேயில்லாத கட்டுப்பாடுகளுக்கும், விதிமுறைகளுக்கும் நாம் கட்டாயப் படுத்தப்படுகிறோம். எத்தனை அழுதாலும் புரண்டாலும், இத்தனை மணிவரை இந்த இடத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பணிக்கப் படுகிறோம். நினைத்துப்பார்க்கமுடியாத வன்முறை நம்மீது பிரயோகிக்கப்படுகிற நாட்கள் அவை.

அப்புறம் நம் வாழ்வில் எதுவுமே நமதில்லை! சமூகம் இழுக்கும் எல்லா இழுப்புகளும், முடிந்தவரை வளைந்து கொடுப்பதும், முடியாதவற்றை எதிர்ப்பதால் வெறுக்கப்படுவதும் மாறி மாறி நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் வாழ்வில், சரியாகவோ அல்லது தவறாகவோ கற்ற பாடங்களை முன்னிருத்தி, குழந்தைகளின் தனித்தண்மைகள் புரக்கணிப்படுவது இன்னொரு பெரும் சோகம்!

எண்ணற்ற விதிமுறைகளும் கற்பிதங்களும் தந்த சிக்கல்கள் நிறைந்த நம் வாழ்வில், சில மணித்துளிகளாவது இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறதென்றால், அது நாமும் குழந்தையாய் மாறி முழந்தைகளுடன் விளையாடும்போது மட்டும் தான்! யோசித்துப்பார்த்தால் ஒரு உண்மை மிக ஆச்சர்யமாய் இருக்கிறது. இன்றைக்கு இருக்கிற நல்லவன், கெட்டவன், ஞானி, அரசியல்வாதி, தீவிரவாதி, etc., etc., எல்லோரின் குழந்தைப்பருவத்திலும் அவர்களின் எண்ணமும் மனசும் ஒன்றுபோலவேதானே இருந்திருக்கும்! இயற்கை தந்த இனிய வாழ்வை இடையில் வந்து மாற்றிப்போட்டது யார்?

பூங்கா செப்டம்பர் 25, 2006 இதழில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
Read More

13 September 2006

இழந்த கவிதைகள்...

ல்லோரைப் போலவே
என்னிடமும் உண்டு
சில கவிதைகள்

உங்கள் ஊடகங்களுக்கான
மொழியில் இல்லை அவை

அர்த்தங்கள் சிதையும்
மொழிபெயர்ப்பிலும் சம்மதமில்லை

இருந்துவிட்டுப் போகட்டும்
என் கவிதைகள்
எனக்கும்
என் உடன் சேர்ந்து
உணர்ந்தவர்களுக்கும்
இடையில் மட்டுமே!

பின்குறிப்பு: நண்பர்களின் விமர்சனங்களுக்குப் பின், சில திருத்தங்கள் செய்யப்பட்ட மீள்பதிவு. ம்..! எப்படியோ... என் வலைப்பதிவு வரலாற்றிலும் ஒரு மீள்பதிவு ;)
Read More

04 September 2006

பிடிபட்டவர்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 3: பிடிபட்டவர்கள்

'விஸ்வநாதன் ராமமூர்த்தி' திரைப்படத்தில் விவேக் தன் மனைவியிடம் "யார் திருடன், சொல்லுபாப்போம்?" என்று கேட்பார். அதற்கு அவர் மனைவியின் பதில் - "திருடுறவன் தான் திருடன்!". இந்த கேள்விக்கான, நம் அனைவரின் பதிலும் கூட இதுவாகத்தான் இருக்கக்கூடும். ஆனால் இதை இல்லை என்று மறுத்துவிட்டு விவேக் பதில் சொல்வார்-

"மாட்டிக்கிறவன் தான் திருடன்..!"

அதைத் தொடர்ந்து வந்த நகைச்சுவைக் காட்சிகளுக்கும் கூட சிரிக்கமுடியாமல், சட்டென்று முகத்திலறையும் நிஜம் இது!. 'மாட்டிக்கொள்பவன் தான் திருடன்' என்பதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, மாட்டிக்கொள்பவன் திருடியவனாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. ஒரு நிரபராதி மாட்டிக்கொண்டால் கூட அவன் திருடன் தான்! ஆக, திருடன் என்பவன் திருடியவன் அல்ல; மாட்டிக்கொண்டவனே!


சின்ன வயதில், திருடன் என்றால் மனசுக்குள் ஒரு பிம்பம் இருந்தது. நம்மைப் போல இல்லாமல் வேறு எப்படியோ இருப்பான் என்று மிதமிஞ்சிய கற்பனைகள். எல்லாம், படித்த கதைப்புத்தகங்கள் மற்றும் பார்த்த திரைப்படங்களின் புண்ணியம்.

ஒருமுறை எங்கள் அத்தையின் ஊருக்கு திருவிழாவிக்குப் போயிருந்தபோதுதான் முதன் முதலாய் ஒரு திருடனைப் பார்த்தேன். முதல் ஆச்சர்யம், அவன் கண்களைச் சுற்றி கருப்புத் துணி கொண்டு கட்டியிருக்கவில்லை! இரண்டாவது, அவன் நம் எல்லோரையும்போலவே வெகு சாதாரணமாய் இருந்தான். திருவிழாக் கடைகளில் ஏதோ திருடிப் பிடிபட்டவனை, ஒரு மரத்தில் கட்டிவைத்து அடித்துக்கொண்டிருந்தார்கள். வைக்கோல் பிரி கொண்டு கட்டப்பட்டிருந்த அவன் உடலின்மேல் தண்ணீர் ஊற்றினார்கள். தண்ணீர் பட்டால் ஏற்கனவே இறுக்கி கட்டப்பட்ட வைக்கோல் பிரி, இன்னும் இறுகி ரத்தம் கட்ட வைக்குமாம்! கூட்டத்தில் யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். கொடுமைப்படுத்தவென்று என்னவெல்லாம் கற்று வைத்திருக்கிறார்கள் என்று வியப்பாய் இருந்தது. ஒரு மத்திம வயதுக்காரன், மிகுந்த கோபத்துடன் அவன் முகத்தில் நச் நச்சென்று குத்திக் கொண்டிருந்தார். வாயிலிருந்து ஒழுகும் ரத்தத்துடன், 'இல்லை... இல்லை...' என்பதாய் தலையசைத்தபடி சோர்ந்து தொங்கியவனைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. ஒருவேளை, வேறுயாரோ திருடியதற்கு இவன் மாட்டிக்கொண்டு அடிவாங்குபவனாயிருந்தால் அது எவ்வளவு கொடுமை என்றோர் எண்ணம் மனசுக்குள் ஓடியது.

திருட்டைப் பற்றியும் மாட்டிக்கொள்ளுதல் பற்றியும் யோசிக்கும்போதெல்லாம், இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வரும். நான் மூன்றோ நான்கோ படித்துக்கொண்டிருந்தபோது, கடலூரின் பொது மைதானத்தில், அந்த ஆண்டிற்கான பொருட்காட்சி ஆரம்பித்திருந்தது. தினமும் பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் கண்ணில் பட்டு ஆர்வத்தை தூண்டிவிட்ட பொருட்கட்சிக்கு, ஆரம்பித்து சில நாட்கள் ஆகியும் போக முடியவில்லை. அப்பாவுக்கு தினமும் வேறு ஏதேதோ வேலைகள். 'இப்பதானே ஆரம்பித்திருக்கிறது போகலாம் போகலாம்' என தினமும் தள்ளிப்போட, நான் அடம் பிடிக்க ஆரம்பித்தேன். அதனால், முதலில் நானும் என் அண்ணனும் மட்டும் அடுத்த நாளே பொருட்காட்சிக்கு போய்வர அனுமதிக்கப்பட்டோம். இன்னொரு நாள் எல்லோருமாக சேர்ந்து போகலாம் என்று அப்பா சொல்லிவிட்டார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்கு வந்ததும் கலர் ட்ரஸ் மாற்றிக்கொண்டு கிளம்பிவிட்டோம். 'என்னென்ன வேணும்னு பாத்து வச்சிக்கோங்க. அப்பாவோட போறப்ப வாங்கிக்கலாம்...' என்ற அம்மா, டிக்கெட்டுக்குப் போக ஆளுக்கு ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்து அனுப்பினார்கள்.

பொருட்காட்சியில் நல்ல கூட்டம். பாதுகாப்பாய் கைகளைக் கோர்த்துக்கொண்டு, எங்கள் விருப்பத்திற்குச் சுற்றினோம். எதை வாங்குவது எதை விடுவது என்று ஒரே குழப்பம். வீட்டில் கேட்டால் வாங்கித்தரமாட்டார்கள் என்று நம்பிய ஒரு 'வாட்டர் கேம்' -ஐ வாங்கினான் அண்ணன். எனக்கு என்ன வாங்குவதென்று தேடிக்கொண்டிருந்தோம்.

ஒரு கடையில் வித விதமான பேனாக்கள் இருந்தன. எழுது பொருட்களின் மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈடுபாடு உண்டென்பதால், வித்தியாசமான பேனா ஏதாவது வாங்கலாம் என பார்த்தோம். சில வகைகள் பொருட்காட்சியில் மட்டுமே கிடைக்கும். ஒன்றை எடுத்து விலை கேட்க, கூட்டத்தில் கடைக்காரர் அதை கவனித்ததாகவே தெரியவில்லை. சட்டென்று ஒரு எண்ணம். கையில் வைத்திருந்த பேனாவை கால்சட்டைப் பையினுள் போட்டுக் கொண்டு, வேரொன்றை கையில் எடுத்துக்கொண்டு விலை கேட்டேன். அவர் விலை சொன்னபின் வேண்டாமென்பதாய் வைத்துவிட்டு அண்ணனை இழுத்துக் கொண்டு வெளியில் வந்துவிட்டேன்.

வந்தபின் மனசுக்குள் ஒரே பதட்டம், யாரும் பார்த்திருப்பார்களோ என. கொஞ்சதூரம் கடந்தபின்தான் தைரியம் வந்தது. இனி பயமில்லை என்றான பின்பு, சற்று பெருமையாகக் கூட இருந்தது! பேசிக்கொண்டே வந்த அண்ணன் முன், சட்டென்று பேனாவை உருவி, 'எப்படி...?!' என்று காட்டினேன். ஆச்சர்யப்பட்ட அவனைப் பார்த்து எனக்குப் பெருமிதம்! ஆனால் அந்தப் பெருமிதம் சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. பேனாவை கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்த போதே வெடுக்கென்று யாரோ பின்னாலிருந்து இழுத்து தூக்கினார்கள். அந்த கடைக்காரர்!

அப்படியே தூக்கிக்கொண்டே தன் கடைக்குப் போனார் அவர். ஏனோ அப்பா அம்மாவையெல்லாம் நினைத்து அழ ஆரம்பித்துவிட்டிருந்தேன். என்ன செய்வதென்று தெரியாமல் அண்ணன் கலங்கிய முகத்துடன் பின்தொடர்ந்தான். "தெரியாம எடுத்துடேன்... காசு வேண்னா வச்சிக்கங்க..." என்று தேம்ப்பித் தேம்பி அழுதபடி, சட்டைப் பையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்தேன். எனது அழுத முகமும், கசங்கிய ஐந்து ரூபாய் நோட்டுடன் நீண்டிருந்த பிஞ்சுக் கையையும் பார்க்க அவருக்கு மிகப் பாவமாக இருந்திருக்கவேண்டும். "காசெல்லாம் வேணாம்... இனி இப்படில்லாம் செய்யக்கூடாது; என்னா..." என்று பேனாவை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பிவிட்டார்.

வாழ்வில் என்னையே மிகக் கேவலமாக உணர்ந்த தினம் அதுதான். அந்த ஒரு வினாடியில் அப்படி ஏன் தோன்றியதென்று இன்றுவரை தெரியவில்லை. பொருட்காட்சிக்குக் கிளம்பியபோது இருந்த சந்தோஷம் மொத்தமும் வடிந்துபோயிருந்தது இருவரிடத்தும். வீட்டில் அண்ணன் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனாலும், சில வருடங்கள் வரை, எங்களுக்குள் எழும் சண்டைகள் உச்சத்தை அடைந்து அவனால் சாமாளிக்க முடியாத பட்சத்தில், "பொருள்காட்சித் திருடா" என்பான் சத்தமாக! எனக்குள் சர்வமும் ஒடுங்கிவிடும். இப்படி அந்த நிகழ்ச்சிக்குப் பின் வந்த எல்லா சண்டைகளிலும் அவனே தொடர்ந்து ஜெயித்தான்! 'அன்னைக்கு ஏன்தான் அப்படிச் செய்தோமோ' என்று என்னையே நொந்துகொள்வேன்.

பின்னாட்களில், அன்று மாட்டியிருக்கவிட்டால் திருட்டு என்னை மேலும் ஊக்கப்படுத்தியிருக்கக் கூடும் என நினைத்துக்கொள்வேன். இந்த இரண்டு சம்பவங்களையும் நினைக்கிற பொழுதெல்லாம் எனக்குத் தோன்றும் ஒரு விஷயம் - முதல் திருட்டில் பிடிபடுகிற எவனும், மீண்டும் திருட்டைப்பற்றியே யோசிக்கமாட்டான் என்பதுதான்!
Read More